97
மூன்றாம் நிகழ்ச்சி : ஒன்பதாங் காட்சி
களம் : கம்பரது மாளிகை.
காலம் : மாலை
நயினார் பிள்ளை : கண்மணி காவேரி! அன்று யான் நின்பாற் கொண்ட காதலைப் புலப்படுத்தியபோது, நீ நின் காதலை வெளிப்படுத்தாமல் நின் தோழியைக் கூவியழைத்து என்னைத் திகிலடையச் செய்ததேன்?
காவேரி : பெரும! நீங்களும் என் அருமைத்தமையனும் ஆருயிர் நண்பர்கள், என் தமையன் வரும் நேரத்தில் யான் உங்கள்மேற் காதல் கொண்டமையினை அவர் தெரியும்படி நேர்ந்தால், அவர் உங்கள்மேற் சீற்றங்கொள்வர் என அஞ்சியே யான் அங்ஙனம் என் தோழியை அழைத்தேன். யான் செய்தது பிழையாயின் அதனைப் பொறுத்தருளல் வேண்டும். (இது து சொல்லிக் கீழ் விழுந்து வணங்குகின்றாள்)
நயினார் : (உடனே அவளை வாரியெடுத்தணைத்து முத்தமிட்டு)
மதியின் கறையைக் கழுவியதன்
மருங்கே மழைக்கார் தனையமைத்துப்
புதிய குவளை மலரிரண்டும்
பொருத்தி நடுவே குமிழ்நிறுத்தி
நுதியின் அளவும் வளைகரிய
சிலைகள் நுடக்கித் துவர்விளங்கப்
பதியும் மதியொன் றுளதேல்நின்
பழுதில் முகத்தைப் பொருவுமால்!