பின்னிணைப்பு
சமய ஆய்வு நூல்கள்
267
ஆராய்ச்சி ஓர் அரிய கலை. இந்த ஆராய்ச்சி தமிழகத்தைப் பொறுத்தவரை மூவகையாகப் பிரிந்து கிடக்கிறது. அவற்றை ஆக்க ஆய்வு, அழிவு ஆய்வு, குழப்ப ஆய்வு எனக் குறிப்பிடலாம். தாம் ஒரு ஆராய்ச்சியாளர் என்று பேர் எடுப்பதற்காக உள்ளதை இல்லை என்று கூறும் ஆய்வோரும் எம்மிடை உண்டு. இவர்களை விடத் தங்கள் கருத்து எதுவென்று தெளிவாகக் கூறாது அவர் இப்படிக் கூறுகிறார் இவர் அப்படிக் கூறுகிறார் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்தும் ஆய்வாளரும் உண்டு. இவ்விரு பாலாராலும் எமக்குப் பயன் இல்லை. எனினும் யாம் செய்த நற்பேற்றின் பயனாக மறைமலையடிகளார் போன்ற சிலர் தோன்றி ஆக்க ஆய்வு செய்துள்ளனர். அடிகளார் யாத்த சமயச்சார்பான ஆய்வு நூல்களுள் பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம், தமிழர் மதம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், சைவ சித்தாந்த ஞானபோதம், சிவஞானபோத ஆராய்ச்சி, திருவாசக விரிவுரை (நாலு அகவல்கள்) மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலியவை குறிப்பிடத்தக்கவை. "இவற்றுள் மாணிக்கவாசகர் காலமும் வரலாறும் என்ற நூல் ஒப்புயர்வற்ற நிலையில் ஒளிவிடுகிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகள் அவர் செய்த ஆராய்ச்சியின் முடிவாக இப்பரந்து விரிந்த நூல் மலர்ந்துள்ளது. இந்நூலில் தேவாரம் பாடிய மூவர்க்கு முந்தியவர் மாணிக்கவாசகர் என்பதையும் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறார். அவர் கூறும் காரணங்கள் அனைத்தையும் ஈண்டு எடுத்து விரிக்கின் அதுவே ஒரு தனி நூலாக அமைந்துவிடும் என்று அஞ்சுவதால் அவற்றின் விரிவு இங்கு வேண்டாம். அடிகளார் வகுத்த காலவரையோடு மாறுபடும் அறிஞரும் உளர் என்பதையாம் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் கூட அடிகளாரின் ஆய்வு உள்ளத்தை, நுண் அறிவுத்திறனை வியந்து போற்றுகிறார்கள்.
இலக்கிய ஆய்வு
.
இலக்கியத்துறையில் அடிகளார் எழுதிய பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, முற்காலப்