குமுதவல்லி நாகநாட்டரசி
185
“இந்தச் சொற்களுக்காகக் கடவுள் உங்களுக்கு அருள் வழங்குவாராக!” என்று மீனாம்பாள் நன்றியறிவின் ஒளி தன் கரிய பெருவிழிகளிற் சிறிதுநேரங் கதிர்த்துத்தோன்ற மெல்லென உரைத்தாள். “தங்கள் வாயிலிருந்து யான் பெறுதற்கு விழைந்த உறுதிமொழி அதுவே அதனை நீங்களே வலியச் சொல்லி விட்டீர்கள்! ஓ, குமுதவல்லி உங்களுக்கு என் நன்றியைச் செலுத்துகின்றேன்- என் நெஞ்சார உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்! நல்லான் என்பவருக்கு ஏதுந் தீங்கு செய்யா தீர்கள்’
-
“என்னைப் பாதுகாத்துக்கொள்ள நேர்ந்தால் அல்லாமல் அவர் இனிமேற் செய்யும் செயல்களால் யான் அவருக்கு எதிராய் நீதி நூற்படிசெய்ய வலுக்கட்டாயஞ் செய்யப்பட்டால் அல்லாமல் நான் அவருக்கு ஒன்றுஞ் செய்யமாட்டேனென்று ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்!” என்று குமுதவல்லி வற்புறுத்திக் கூறினாள்.
"குமுதவல்லி, இனிமேல் அவர் உங்களைத் தொல்லைப் படுத்த மாட்டார். ஆனால், எப்போதாயினும் அவர் மாறு கோலம் பூண்டிருக்கக் காண்பீர்களாயின், அவரைத் தாங்கள் காட்டிக்கொடாமலிருக்கும்படி தங்களைக் கெஞ்சிக் கேட்டுக்
கொள்கின்றேன்!”
"இல்லை- அவர் தமக்கு இரையாக்கப் பார்க்கும் களங்க மற்றவர்களைக் காக்கும்பொருட்டாக அல்லாமல், நான் அவரைக் காட்டிக்கொடுக்கமாட்டேன்!” என்று குமுதவல்லி கூறினாள்.
"இதைவிட இன்னும் மிகுதியாக உங்களால் வாக்குக் கொடுக்க முடியாது; நானும் உங்கள் வாயினின்று இன்னும் மிகுதியாகக் கேட்கக்கூடாது. ஐயோ! என் வல்லமை யெல்லாம் என்னைவிட்டு நழுவிப்போகின்றதே - ஏதோ படலம் வந்து என் கண்ணை மறைக்கின்றதே - என் எண்ணங்கள் தாறுமாறாகக் குழம்புகின்றனவே - ஆ! அந்தத்துறக்கவுலகத்தை இனிநான் என்றும் பாரேன்! குமுதவல்லி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்! நான் சொல்வதை உற்றுக் கேளுங்கள் - எச்சரிக்கையாயிருங்கள் எச்சரிக்கையாயிருங்கள்- என்று மீனாம்பாள் முற்றுஞ்
சொல்லக்கூடாமல் நின்றுவிட்டாள்.
-