168
ப
கடிதம் 15
இம்மைக்கும் மறுமைக்கும் என் இன்னுயிர்த் துணையாய் அமர்ந்த காதற்கற்பகமே,
தங்கட்குத் திரும்பக் கடிதம் எழுதுவதற்கு இரண்டு கிழமை கடந்துபோனது பற்றி நிரம்ப வருந்துகின்றேன். அந்தப் பாரசிகப் பெருமான் பெருமாட்டியாரிடமிருந்து கடிதம் இன்றுவரும் நாளை வரும் என்று எதிர்நோக்கியபடியாயிருந்து பார்த்த கண்ணும் பூத்துப் போயிற்று! அக்கடிதம் வந்தபின் தங்கட்கு விடை எழுதலாமென் றிருந்தேன். இதற்கிடையில் தங்களிட மிருந்துவந்த கடிதத்தால், தங்கட்கும் அவர்களிடமிருந்து கடிதம் வரவில்லையென்பதறிந்து மிக வருந்தினேன். அவ்விருவரும் நம்மை மறந்துவிட்டார்களோ என்று தாங்கள் ஐயுறவு கொள்வதுபோல் யானுங் கொள்ளக்கூட வில்லை. தாங்கள் அவ்விருவர் இயற்கைகளையும் பலநாட்பழகி அறியாமையால் தாங்கள் அங்ஙனம் ஐயப்படுவது இயல்புதான். ஆனால் யானோ அவர்களோடு அன்பால் நெருங்கிப் பலநாட் பழகியிருத்தலால் அவ்வாறு அவர்களைப் பற்றிச் சிறிதும் நினைக்கக்கூடவில்லை. இங்ஙனமாக அவர்களிடமிருந்து கடிதம் வராமல் நான் நீளநீள என் மனத்துயரமும் நீண்டுகொண்டே வந்தது. இதனால், நேற்று எனக்கு உண்டான துன்பம் அளவிட்டுச் சொல்ல முடியாது. “சென்ற ரவு ஒருமணி வரையில் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அதனோடு, இந்தக் கொடியவெயிற் காலத்தின் வெப்பமும் புழுக்கமுந் தாங்கக்கூடியனவாயில்லை. அதனால் மேன் மாடத்தின் மேற்றளத்தின்மேலேறி, அது வெறுந்திறப்பான வெளியாதலால் அங்கே உலவிக்கொண்டிருந்தேன். இப்போது என் உள்ளத்தை மகிழ்விக்கத்தக்க தோற்றம் ஒன்றும் இல்லை. வானத்தில் நிலவொளியில்லை. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. வானத்தின் கட் பலகோடிக் கணக்காய்க் காணப்பட்ட வான்மீன்