உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் 16

அற்றன்று, பொறிபுலன் கருவிகளின் வழி அறிவும் முயற்சியும் நிகழாது, அவை யெல்லாங் கடந்து இறைவன் திருவருளிற் றோய்ந்து “பாலருடன் உன்மத்தர் பசாசர்குண மருவித்” தம்மையும் உலகத்தையும் மறந்து நிற்குஞ் சீவன்முத்தர் நிலையினைக் கூறும் அவ்வருளுரையினை, உலகத் துயிர்களை ஈடேற்றுதற்பொருட்டுத் தோன்றி அவ் வுயிர்கள்பால் அருளும் அன்பும் பூண்டு ஒழுகி, அவர்க்கு இறைவன்றன் அருட்செயல் மாட்சிகளைக் காட்டுவாரான நம் ஆசிரியர்க்கும் ஏனைச் சிவனடியார்க்கும் ஏற்றுதல் பொருந்தாதென்றுணர்க. சீவன்முத்தர்நிலை அந் நிலையை அடைந்தார்க்கன்றி ஏனை யோர்க்குப் பயன்படாது; சிவனடியார் நிலையோ அவர் தமக்கே யன்றி உலகத்துள்ள எல்லா வுயிர்க்கும் பயன்படுவ துடைத்து. அற்றேற், சிவனடியார் தம்முட் சீவன் முத்தராய் நின்றார் இல்லையோ வெனின்; அற்றன்று, கண்ணப்பர் பெருமிழலைக் குறும்பர் முதலானவர் தம்மையும் உலகத்தையும் மறந்து இறைவன் திருவருட் பெருக்கிலேயே முழுதுந் தோய்ந்து நின்ற சீவன்முத்தரே யாவர்; மற்று, நம் சமயாசிரியன் மாருந், திருமூலர் காரைக்காலம்மையார் முதலான ஏனை நாயன்மார் பலருந் தாம் இறைவன் றிருவருளிற் றோய்ந்து நின்றதோடு அமையாது, உலகத்தாரையும் அந் நிலைக்குச் செலுத்தும் பேர் அருட்டிறம் வாய்ந்தவராகலான், அவர்பால் இறைவன் செயலே யன்றி அவர் தம் அருட்செயலும் ஒருங்கு விரவி நிற்கலாயிற்று. ஆகவே, இறைவனுக்கு அடிமைத்திறம் பேணுஞ் சான்றோருள்ளும் இவ்விருவேறு நிலைகள் கட்புலனாய்த் தோன்றக் காண்டலின், அவருள் ஒரு நிலையில் நின்றார்க்குரிய தன்மையினை வேறொரு நிலையில்

நின்றார்க்கு ஏற்றிக் கூறுதல் பகுத்தறிவில்லாதார் செயலேயா மென்று ஓர்க. ஆகவே, அப்பரும் அப்பூதிகளும் ஒருங்கிருந்து திருவமுது கொண்டதுஞ், சுந்தரர் பரவை சங்கிலியாரை மணந்ததுந் திருவருட்செயல்களேயன்றி, அவர் தஞ் செயல்கள் அல்லவென்ற அம் மறுப்புரைகாரருரை பொருளில் புல்லுரை யேயாமென்று தெளிக.

இனி, அன்பே உயர்ந்ததாகலின் அதனைக் கைக்கொள்க, சாதிவேற்றுமை தாழ்ந்ததாகலின் அதனைக் கொள்ளற்க என்று நம் ஆசிரியர் அறிவுறுத்தினராயின், அவ்வறிவுரையினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/205&oldid=1583946" இலிருந்து மீள்விக்கப்பட்டது