64
என்ற
மறைமலையம் 16
உணர்வின் றொகுதியை எவர்தாம் விளக்கி யுரைக்கவல்லார்? அவளைப் பார்த்தபொழுது அவன் தன் கன்னங்களில் யாறுபோல் ஒழுகி ஓடிய கண்ணீராலன்றிப் பிறிதொரு வாற்றானும் அதனைத் தெரிந்துரைக்கமாட்டா ா னாயினான்; இந்த நிலையில் அவன் நெடுநேரம் நின்றிலன்; உடனே தன் எதிரே யிருந்த நீரோட்டத்திற் குதித்து வீழ்ந்தான்; வீழ்தலும், அஃதொரு யாற்றின் தோற்றமா யிருந்ததன்றி வேறல் லாமை கண்டு அதனடியில் நடந்து போய் மற்றைப் பக்கத்துக் கரைமேல் ஏறினான். அங்ஙனம் அவன் அணுகுதலும் அறாத்தில்லை அவனைப் பறந்துவந்து தழுவினாள்; தழுவவே, தானும் அவளைத் தழுவவிரும்பியும், அது கூடாவாறு தடை செய்த தனது பருவுடம்பின் பொறையினின்றும் விடுபடுதற்கு அவாவினான். ஒருவரை ஒருவர் பலகால் உசாவியும் அன்பு காட்டியும் அளவளாவிய பின்னர், அவள் மலர் மலிந்த அவ் விடத்திற் பெறப்படுவனவாகும் எல்லா ஒப்பனைகளும் பொருந்துமாறு தன் கையாற் சமைத்த ஒரு கொடிப்பந்தருக்கு அவனை அழைத்துச் சென்றாள். அவள் அதனை மனக் கற்பனைக்கும் எட்டாவண்ணம் மகிழ்வுறச் செய்து நாடோறும் புதிதுபுதிதாக ஏதேனும் ஒன்றை அதனொடு சேர்த்துக் கொண்டே வந்தாள். மராடன் அவளது அந்த உறையுளின் உரைக்கலாகா அழகினை வியந்து, அதன் எப்பக்கத்துமிருந்து வீசும் நறுமணத்தை நுகர்ந்து களிப்பால் மெய்ம்மறந்து நிற் கையில், அறாத்தில்லை அவனை நோக்கி: “நீர் இறைவனிடத்து வைத்திருக்கும் மெய்யன்பும், மக்கள் எல்லாரிடத்தும் நீர் உண்மையாய் ஒழுகுமியல்பும் நுமது வாழ்நாள் எப்பொழுது முடியினும், நும்மை இவ்வின்ப உலகத்திற்குத் திண்ணமாய்க் கொணர்ந்து சேர்ப்பிக்கும் என்பதனை யான் நன்கு அறிவேனாதலால், நும்மை வரவேற்றற்பொருட்டு இக்கொடிப் பந்தரை அமைப்பே னாயினேன்” என்று மொழிந்தாள். அதன்பின் அவள், சில ஆண்டுகளுக்குமுன் இறந்து போய் மகிழ்சிறந்த அப் பந்தரின்கீழ்த் தன்னோடு உடனுறைந்து வருகின்ற தன் மகார் இருவரை அவனிடங் கொணர்ந்து காட்டி, அவனோடு இன்னும் இருக்கும் ஏனைச் சிறுமகாரும் இவ் வின்பவுறையுளிற் பிற்காலத்து வந்து, தாம் எல்லாருமாய் ஒருங்கு கூடும் வகையாய் வளர்த்து வருகவென்றும் அறிவுரை கூறினாள்.