உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

  • மறைமலையம் - 24

இனி, அக் கல்லாடநூல் ‘நரியைக் குதிரையாக்கிய தனை’ 44 ஆவது செய்யுளினும், “பாணபத்திரர் பொருட்டு விறகு தலையனாய்ச் சன்று இசைபாடினதனை 45 ஆவது செய்யுளினும், 'வையையடைக்க மண்சுமந்ததனை” 49 ஆவது செய்யுளினும், 'மூர்த்தி நாயனார் முழங்கை தேய்த்த திருத்தொண்டினை' 57 ஆவது செய்யுளினும், 'சாக்கிய நாயனார் திருத்தொண்டினை' 68 ஆவது செய்யுளினும், 'இடைக்காடன் பிணக்குத் தீர்த்ததனையும்” “காரைக் காலம்மையார் திருவாலங் காட்டிற் றிருநடங் கண்டதனையும்" 78 ஆவது செய்யுளினும், ‘காரைக்காலம்மை மாங்கனியால் வீடு பெற்றமையினை’ 101 ஆவது செய்யுளினும், இவற்றினும் பழைய திருவிளை யாடல்கள் பலவற்றை இடையிடையே பல செய்யுட்களினும் அன்பால் என்பு நெக்குருக எடுத்தோதியவாறு போலச், சிவபெருமான் திருவருள் பெற்றோரிற் றலை சிறந்து நிற்கும் அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான ஏனைமூவரை ஒருசிறிதுங் குறிப்பிடாமையால், அக் கல்லாட நூல் அம்மூவர்க்கும் முற்பட்டதென்பது நன்கு பெறப்படும். அந்நூலாசிரியர் சிவபெருமானிடத்தும், அவனடியாரிடத்தும் பேரன்புடையராகக் காணப்படுதலால், அவர் அம் மூவர்க்கும் பின்னிருந்தனராயின் அவர் நிகழ்த்திய அற்புதங்களை ஒருசிறிதாயினுங் கூறாது விடார். மற்று அம் மூவரைப் பற்றிய குறிப்புச் சிறிதுங் கூறாமைகொண்டே அவர் அவர்க்கு முன்னிருந்தாரென்பது ஒருதலையாகத் துணியப்படும் என்க. அங்ஙனமாயின், திருஞானசம்பந்தப் பெருமான் வெப்புநோய் தீர்த்தமை

அறுபத்து நான் கு திருவிளையாடல்களுள் ஒன்றாய் இருத்தலானும், கல்லாடத்துள் “எட்டெட் டியற்றிய கட்டமர் சடையோன்" என அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் குறிப்பிடப்பட்டிருத்தலானும் அந்நூல் திருஞான சம்பந்தர்க்கும் பிற்பட்டதாதல் பெறப்படு மாலோ வெனின்; மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்திற் குறிப்பிட்ட பல திருவிளையாடல்கள் பெரும்பற்றப்புலியூர் நம்பியார் திருவிளையாடற் புராணத்திலும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தினுங் காணப் படாமையானும், இவ்விரு புராணங்களிற் காணப்பட்டனவும் ஒன்றிலுள்ளவாறு பிறிதொன்றில் காணப்படாமல் ஒன்றில் ஒருவாறாயும் பிறிதொன்றிற் பிறிதொருவாறாயும் இருப்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/307&oldid=1590940" இலிருந்து மீள்விக்கப்பட்டது