234
மறைமலையம் - 30 -30
முடித்து வைத்தேன்... 'திருவள்ளுவரும் பரிமேலழகரும்' குறித்து நுணுக்கமான பொழிவைப் பண்டிதர் கதிரேசஞ் செட்டியார் ஆற்றினார். தமிழில் வடமொழிச் சொற்களைக் கலப்பது பற்றிய அவர்தம் கருத்துகளை வன்மை யாகக் கடிந்து பேசினேன். இடையிடை அவர் குறுக்கிட்டுப் பேசியதால் சினங்கொண்டு மேலும் கடுமையாகப் பேசினேன். பின்னர்க் கதிரரேசஞ் செட்டியாரவர்கள் தம் குற்றம் உணர்ந்து என்னிடம் மன்னிப்பு வேண்டினார்.
5-8-1927 மாலையில் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை வந்தார். என் மகள் நீலா-திரு. திருவரங்கம் ஆகியோர் திருமணம் பற்றிப் பேசி முடித்தோம்.
2-9-1927 மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது. புகழ்மிக்க நண்பர் பலர் மணமக்களை வாழ்த்தினர். சாதி வேறுபாடு பாராட்டாமல் அனைவர்க்கும் விருந்திடப்பட்டது.
14-10-1927 திருச்சி சந்திப்பு வந்தடைந்தேன். சைவ சித்தாந்த சபை உறுப்பினர்களும் பண்டிதர் அ.மு. சரவண முதலியாரும் என்னை வரவேற்றனர். பண்டிதர் வேங்கடசாமி நாட்டாரும் பிறரும் என்னைக் காண வந்தனர்.
இ
30-12-1927 ஆர்வமிக்க தமிழ் மாணவர்கள் திரு. ஜீவானந்தமும் திரு. கும்பலிங்கமும் என்னைக் காண வந்தனர். காந்தியின் நடைமுறைப்படுத்த இயலாக் கோட்பாடுகளைப் பற்றியும், பார்ப்பனரின் கைப்பாவை யாக அவர் இருப்பதால் தமிழர்க்கு அவரால் ஏற்படும் ஊறு பற்றியும் நெடுநேரம் பேசினேன்.
1928
15-1-1928 கொழும்பு 'விவேகானந்தன்' ஆசிரியரின் ஆரிய வேதங்களைப் பற்றிய கட்டுரைக்குரிய மறுப்பு எழுதினேன்.
19-2-1928 திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் என்னைக் காண வந்தார்.