பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

303

சந்தேகப்பட்டு பெட்டிக்குள் ஏதோ கெடுதல் இருப்பதாக உடனே தீர்மானித்துக் கொண்டீர்கள்! இப்படிப்பட்ட மகா கூர்மையான தீர்க்க தரிசனம் தங்களிடம் இருப்பதனால்தான் தங்களுக்கு இவ்வளவு அபாரமான கீர்த்தியும் பெயரும் உண்டாகி இருக்கின்றன.

சாமியார்- நான் இப்போது சொன்ன அற்ப விஷயங்களைக் கொண்டே நான் பெட்டிக்குள் ஏதோ கெடுதல் இருப்பதாக சந்தேகப்படவில்லை. தஞ்சை போலீஸ் சூபரின்டெண்டெண்டு இந்த ஜில்லா முழுதும் சுற்றுப் பிரயாணம் போய் வெளியூர்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களைத் தணிக்கை பார்க்க வேண்டியது அவருடைய உத்தியோகக் கடமை. அடுத்த வாரத்தில் அவர் எந்தெந்த ஊர்களுக்குப் போய் முகாம் செய்வார் என்பதற்கு அவர் இந்த வாரத்திலேயே ஒரு குறிப்பு எழுதி, அதன் நகலை முன்னாகவே அந்தந்த ஸ்டேஷனுக்கு அனுப்புகிறது வழக்கம். அதன் நகல் ஒன்று எனக்கும் வருவதுண்டு. ஏனென்றால், ஏதாவது அவசர சந்தர்ப்பம் நேரிடுமானால், நான் உடனே புறப்பட்டு அவர் இருக்கும் இடத்துக்குப் போகலாம் என்ற செளகரியத்தை உத்தேசித்து அந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அவர் இந்த வாரத்தில் முகாம் செய்ய உத்தேசித்து இருக்கும் ஊர்களைக் காட்டிய குறிப்பை எனக்குப் போன வாரத்திலேயே அனுப்பி இருந்தார். அதை நான் எப்போதும் என் மேஜையின் எதிரிலேயே வைத்திருப்பது வழக்கம். அதை நான் உடனே பார்த்தேன். பார்த்ததில் இந்த வாரம் முடிய அவர் பட்டுக் கோட்டைத் தாலுக்காவில் உள்ள ஊர்களில் முகாம் செய்யப் போவதாக எழுதி இருக்கிறார். அதைப் பார்க்க, என் மனசில் உண்டான சந்தேகம் அதிகரித்தது. அவர் எனக்கு அனுப்பும் சுற்றுப் பிரயாணக் குறிப்பில் கண்ட ஊருக்குப் போகாமல், ஏதாவது அவசர நிமித்தமாக வேறே ஊருக்குப் போனால், அவர் உடனே அந்தத் தகவலை எனக்குத் தெரிவித்து விடுவார். அந்தப் பெட்டியையும், கடிதத்தையும் கொண்டு வந்தவன், அவர் கும்பகோணத்தில் இருந்து அவைகளை அனுப்பியதாகச் சொன்னான் ஆகையால், அவர் எனக்கு அறிவிக்காமல் கும்பகோணம் போயிருப்பாரா என்ற சந்தேகம் உண்டாகிவிட்டது. நான் அந்தப் பெட்டியை உடைத்துப் பார்க்கப் பிரியப்படாதது என்னுடைய நல்ல காலந்தான் என்று