பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

'கலைப்படிமம்' என்னும் அகவயப் பொருள்தான் எல்லாக் கலைப்படைப்புகளுக்கும் அடிப்படையானது. இது எப்படித் தோற்றம் எடுக்கிறது, எப்படிக் கலை வடிவம் பெறுகிறது என்பதை ஆராய்ந்து அறிவதே எல்லாக் கலைகளையும் படைப்பதற்குத் தேவையான தத்துவக் கூறு. இதை மறுப்பதற்குத் தற்கால முதலாளித்துவத் தத்துவ இயலார் முயலுகிறார்கள்.

கலைப் படிமக் கொள்கைக்கு எதிராக முதலாளித்துவத் தத்துவ ஆசிரியர்கள் உருவமற்ற கலை என்ற கொள்கையை முன்நிறுத்துகிறார்கள். அதாவது, உள்ளத்தில் புற உலகினான கலைப் படிமம் தோற்தமெடுத்து நிலைப்பதில்லை என்று அவர்கள் சாதிக்கிறார்கள்.

இயந்திர தொழிலால் உற்பத்தி செய்யப்படும் தொழில் விளைவுட்பொருளுக்கும், மனத்தில் தோன்றுகிற கலைப்படிமங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முதலாளித்துவத் தத்துவவாதிகள் தகர்க்க முயலுகிறார்கள்.

இயந்திரமும் ஒரு கலைப்படைப்பே என்ற வாதத்தை முதலாளித்துவத் தத்துவங்களில் நாம் கேட்கிறோம். 'உருவமற்ற கலை' என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் கணிதம், சைபர்னடிக் போன்ற பெளதிகச் சிந்தனை முறைகளே கலைப் படைப்புக்கு அடிப்படையானவை என்ற (புதிய கலைத் தத்துவ ஆசிரியர்களின்) கூற்றையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டிவரும்.

'கற்பனைப் படிமங்களை' வெட்டி வீழ்த்திவிட்டுப் புதிய கொள்கையின் அடிப்படையில் கலையை ஆராய்கிற தத்துவம் ஒன்றை முதலாளித்துவத் தத்துவ அறிஞர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்களா? இல்லை.

வெளியீட்டுத் தன்மை முறை (Expression)

குறியீட்டு முறை

ஒளிக் கலை

இயக்கக் கலை

போன்ற எத்தனையோ தத்துவங்கள் தோன்றி, கலைப் படைப்பின் தோற்றத்தையும் வெளியீட்டையும் விளக்க முயன்று சோப்பு நுரைபோல வெடித்துப் போயுள்ளன.