பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

39


கலைப்படிமக் கொள்கையின் துணையின்றி வேறு வழிகளில் கலைப் படைப்பை விளக்க முயன்று தோற்றுப்போன முதலாளித்துவப் போலிக் கலைத் தத்துவங்கள் மிகப்பல.

பல நூற்றாண்டுகள் மனப் படிமங்களைக் கையாண்டு, கலைஞர்கள் சிந்தித்துக் கலையுருவங்களைப் படைத்துள்ளார்கள். அவர்களது கலைப்படைப்புகளின் தோற்ற முறை பற்றிய தத்துவம் ஒத்தகைய தாக்குதல்களாலும் அழியாதது.

கலைப் படிமக் கொள்கைக்கு எதிரான அவர்களின் புதிய கலைத் தத்துவப் பெரு வெள்ளம் இப்போது வற்றி வறண்டு வருகிற நிலையில் உள்ளது. தங்களது கலைக் கொள்கைகளும் கலைப் படைப்புகளும், சில பத்தாண்டுகளில் அழிந்துபோய் விட்டதை, 'புதிய' கலைஞர்கள் காண்கிறார்கள். அதனால் அவர்கள் கொள்கைகளைக் கைவிட்டுக் கலைகளின் வலிமையைக் குறைத்து, அற்பமான பொருள்களைக் குறித்துப்போலிக் கலைகளைப் படைத்துத் தங்களையும் கலையுலகையும் ஏமாற்றி வருகிறார்கள்.

கலையின் 'மனித அம்சத்தை' அழிக்க முயலும் கலைஞர்கள், தத்துவத் தரையை இழந்து ஆகாயத்தில் அற்புத நடனம் ஆடுகிறார்கள். கலை பற்றிய முழுமையான கொள்கையை உருவாக்க அவர்களால் முடியவில்லை.

ஆயினும் முதலாளித்துவ உலகில் கலையின் மனிதத் தன்மையை அழிக்கிற முயற்சியை எதிர்த்து நிற்கும் புதிய சக்திகள் தோன்றியுள்ளன. புதிய கலைத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் காப்ஃகா, மனித நேசக் கவிஞனான வால்ட் விட்மனை வேண்டா வெறுப்பாகப் புகழ்ந்து கூறி, தற்கால அமெரிக்கக் கவிஞர்களுக்கு அவரது கவிதைகள் வழிகாட்டுகின்றன என்று ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், வால்ட் விட்மனது மானுடநேசம், முற்போக்குக் கொள்கைகள், அடிமைப்பட்டோர் மீது அன்பு, போராடும் மக்களோடு ஐக்கியம் ஆகிய கொள்கைகள் காப்ஃகாவுக்கும் அவருடைய சகாக்களுக்கும் வேம்பாகக் கசந்தன. ஆயினும் வால்ட் விட்மனின் கருத்தும் கலையும் உலகை மாற்றுகிற சக்திகளுக்கு அசுர வேகம் கொடுப்பதை உணர்ந்த காப்ஃகா, தனது எரிச்சலை விட்மன் மீது காட்டிக்கொள்ள 'எங்கள் பன்றித் தாத்தாவைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது' என்று ஒரு கட்டுரையை 'அமெரிக்க இலக்கியம்’ என்ற பத்திரிகையில் எழுதினார்.

உலகமெங்கும் பிற்போக்குக் கொள்கைகளையும் கலை வணிகத்தையும் தடுக்கக் கூடிய முற்போக்குக் கலை முன்னணி தோன்றிப் பலம் பெற்று வருகிறது.