பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

45


மேற்கூறியவைதாம் பிரதிபலிப்புக் கொள்கையின் முக்கியமான கூறுகள். இவைதாம் அழகியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்தப்பட வேண்டிய முன்தேவையான தத்துவக் கருத்துக்கள்.

அறிவுத் தோற்றவியலும் அழகியலும் மிகவும் நெருக்கமான வாழ்வியல்கள். ஆயினும் இவற்றிடையே வேறுபாடுகளும் உள்ளன.

அழகுணர்வு என்பது யதார்த்த உலகத்தை அறிவதற்குப் பயன்படும் சமூக உணர்வின் வடிவம் ஆகும். இதனை உண்மை யானது, பொய்யானது என்று இரு வகைப்படுத்தலாம்.

புலன் உணர்வில் தொடங்கிப் பொதுமைப்படுத்துதல் வரை மேலே மேலே முன்னேறுகிற ஒரு சிந்தனை இயக்கம் அறிவியலுக்கும் அழகியலுக்கும் பொதுவானது.

இங்கும் அழகியல் மதிப்பீடு, சமூக வரலாற்று அனுபவமே.

கற்பனை, அழகியல் சிந்தனை இயக்கத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

அழகியல் உணர்வு செயலூக்கம் உடையது. ஏனெனில் சில வர்க்கங்களின், குழுக்களின் தேவைகளையும் ஆர்வங்களையும் அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஒரு மனிதன் வாழ்க்கையோடும் யதார்த்தத்தோடும் முற்போக்குச் சக்திகளோடும் எந்த அளவுக்கு இணைந்திருக்கிறானோ, அவ்வளவுக்கு அவனுக்கு அழகியல் உணர்வு மிகுதியாக இருக்கும்.

இத்தத்துவ விளக்கங்களெல்லாம் கலையைப் பற்றிய பொதுவான அறிவைப் பெறவும், கலைப் படிமம் பற்றிய தெளிவான கருத்தைப் பெறவும் எதற்காகத் தேவையாகின்றன? இவ் விரண்டு பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்ள இக்கருத்துக்களெல்லாம் அவசியம்தானா?

மேற்கூறிய தத்துவப் பார்வையில் கலையென்பது ஒரு குறிப்பிட்ட வகையான, புறவய யதார்த்தத்தின் 'பிரதி பலிப்பு'.

யதார்த்தவாதம், கற்பனாவாதம், நடப்பியல்வாதம் (Realism, Romonticism, Naturalism) ஆகிய கலைகளின் பிரதிபலிப்பு, வேறு வேறு வடிவங்களாயிருக்கும். ஆயினும் அவை பிரதிபலிப்புக்கள்தாம்.

ஒரே விதமான யதார்த்தம் வெவ்வேறு கலைகளில் வேறு வேறு விதமாகப் பிரதிபலிக்கும்.

கவிதை, சிற்பம், கட்டிடக்கலை, ஓவியம், நடனம் ஆகிய கலை வடிவங்களில் ஒரே உண்மை பல்வேறு அழகிய முறைகளில் பிரதிபலிக்கப்படுகிறது.