பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

நா. வானமாமலை


கலைப் படிமத்தில் கலை அளவு காணப்படவேண்டும். அழகியல் விதிகளின்படி உருவாகிற படிமத்தில், அது எதன் படிமமோ அப்பொருளின் வளர்ச்சிக் கட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளின் ஒழுங்குகள் காணப்படவேண்டும். எனவே கலைப் படைப்புகளில் ஒத்திசைவு (Rythm), உறுப்புப் பொருத்தம் (Harmony), உட்பொருத்தம் (Symmetry), வனப்பு (Grace). இன்னிசை (melody) முதலியின இருக்கவேண்டும். புறவய உலகை ஒன்றாக அறிந்து கலைப் படைப்பாக ஆக்குகிற கலைஞனுக்கு இவ்வம்சங்கள் பற்றிய வளர்ச்சி இருக்கும். பயிற்சியால் அதனை மிகுவித்துக் கொள்ளலாம்.

கலைப் படைப்புகளில் கலைஞனது கலைத் தீர்ப்பு அல்லது விமரிசனம் உள்ளார்ந்து காணப்படும். அவனது அனுதாபம்,நேசம், கோபம், வெறுப்பு அப்படைப்பின் பொருள் மீது இருப்பது, கலைப் படிமத்தில் நாசூக்காக வெளிப்படும். பிக்காலோவின் புறா, உலகமெங்கும் பரவவேண்டிய சமாதானத்தின் குறியீடாகும். மனத்தில் விருப்பத்தை எழுப்புகிறது. இது குறிக்கும் பொருள் விரும்பத்தக்கது என்பது கலைஞனின் தீர்ப்பு. பங்களாதேஷ் போரின்போது வரையப்பட்ட ஓர் ஓவியரின் சித்திரத்தில் ஓர் இளம் பெண் பாகிஸ்தானிய முரடர்களால் கற்பழிக்கப்பட்டுக் கிடக்கிறாள்; அவளது சிறு குழந்தை பசியால் கதறிக் கொண்டு அவள் மேல் ஏறி, அவளது மார்பைத் தேடுகிறது; பின்னணியில் ஒரு பெரிய பெண் உருவத்தின் தலை, கால், மார்பு முதலிய உறுப்புகள் வெட்டப்பட்டுப் பல திசைகளில் எறியப்பட்டுள்ளன; வாள் பிடித்த கையொன்று சித்திரத்தின் ஒரு மூலையில் காட்டப்பட்டுள்ளது.

இங்கும் ஓவியன் தனது தீர்ப்பை அளித்துள்ளான். ஆதிக்கப் போர்களின் அழிவை அவன் சித்திரித்துள்ளான். வாள் பிடித்த கை அவனது தீர்ப்பு. அதாவது இக்கொடுமையை ஒழிப்பதற்கான மனித சங்கற்பம்.

இலக்கியத்திலும் எழுத்தாளனுடைய தீர்ப்பு வெளியாகும். நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் மூலம் கலைஞனது ஆன்மா வெளிப்படும்.

தனி மனித வாழ்க்கையில் பொதுமையின் செயல்பாட்டைக் காட்டுவதன்று கலைப் படிமம். பொதுமைதான் வலிமை வாய்ந்தது. பொதுமையின் கீழ் எத்தனை தனித்துவங்களை வேண்டுமானாலும் கொணரலாம்.

முதலாளித்துவ அமைப்பு தனி மனிதனது வளர்ச்சிக்கும் நலன்களுக்கும் எதிரானது. தனி மனிதன் உண்மையான சுதந்திர நிலைமையில் தனது மானுடத் தன்மையை