குறைவு. இருக்கிறவர்களும் கன்னிகாஸ்திரீகள். அவர்களுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை.
ஆகையால் மஞ்சுளாவைப் பற்றிப் பொறாமைப் படவும் ஆள் இல்லை! வாழ்த்தி மகிழவும் ஆள் இல்லை!
மஞ்சுளாவிற்கு ஆனந்தன் கிடைப்பதற்கும் அல்லது ஆனந்தனுக்கு மஞ்சுளா கிடைப்பதற்கும் பாலமாக விளங்கிய சிறுமி பாமினியின் குடும்பம் திருமணத்திற்கு வந்திருந்தது. அவர்களுக்குத் தெரியுமா தங்கள் குழந்தையால் தான் இந்தத் திருமணம் நடைபெறுகிறதென்று? சில விஷயங்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்து கைகூடி விடுகிறது. சில விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்தும் கைகூடாமல் போய்விடுகிறது. இவை இரண்டுமே காதல் விஷயங்கள் தான்!
மணவிழா அன்று இரவு! ஆனந்தன் ஒரே மகனானதால் தன்வீட்டில் இனி ஒரு பெரிய விழா அண்மையில் நடைபெறச் சாத்தியமில்லை என்று கருதி ஆனந்தனின் தந்தை அன்று சுவாமி புறப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்தார். மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம்-எல்லாம் இன்னொரு பக்கம் கோயில் வாசலில் நடந்து கொண்டிருந்தன. மாடியில் நின்று வெகுநேரமாக இவைகளைக் கண்டு களித்துக் கொண்டிருந்த ஆனந்தனும், மஞ்சுளாவும் அப்போதுதான் முற்றத்து விளக்கை அணைத்துவிட்டு மல்லிகைப் பூக்கள் விதைக்கப்பட்ட பள்ளி அறைக்குள் நுழைந்தார்கள்.
வீட்டில், கீழே-- இராமாயணத்தை எழுதி முடித்துவிட்டு கம்பன் பெருமூச்சுவிட்டதைப் போல ஆனந்தனின் தந்தை திருமணத்தை முடித்துவிட்டு பெருமிதத்துடன் உடம்பை முறித்துச் சொடக் பறித்துக் கொண்டு 'சுவாமி சேர்க்கை சேர்ந்து விட்டதா?’ என்று வேலைக்காரனைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
"சுவாமி தெற்கு வீதியில் வந்து கொண்டிருக்கிறது. சேர்க்கை சேர விடிஞ்சு போயிடும்” என்று வேலைக்காரன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
29