பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

‘இருக்கும் கடன் இருக்கட்டும்; மேற்கொண்டு எவ்வளவு வேண்டும்?’ என்று அவன் இவளைப் பார்த்துக்கொண்டே என்னைக் கேட்டிருப்பானே! போச்சே போச்சே போச்சே, ஓர் அரிய அரிய அரிய சந்தர்ப்பம் அனாவசியமாக அனாவசியமாக அனாவசியமாகக் கைநழுவிப் போச்சே போச்சே போச்சே!' என்று பலவாறாகச் சிந்தித்து, நிந்தித்து, ‘குழந்தையின் பெயர் என்ன அம்மா?’ என்று அவள் தாயாரை ‘ஐஸ் கிரீம்' போல் உருகிக் கேட்க, 'அவள் பெயர் தெரிந்து உமக்கு என்ன ஆகவேண்டும்? போம் ஐயா, போம்! என்று அவள் 'ஹாட் காப்பி' போல் முகத்தைத் திருப்ப, ‘சனியன், சனியன், சனியன்! சினிமா நட்சத்திரங்களுக்குப் பின்னால்தான் தாய் என்ற பெயரிலோ, தகப்பன் என்ற பெயரிலோ, கணவன் என்ற பெயரிலோ இப்படி ஏதாவதொரு சனியன் வந்து தொலைகிறதென்றால் இவளுக்குப் பின்னாலுமா இப்படி ஒரு சனியன் வந்து தொலைய வேண்டும்?’ என்று அவளுக்குத் தெரியாமல் தம் தலையில் தாமே இரண்டு தட்டுத் தட்டிக்கொள்ள, அதை எப்படியோ பார்த்துவிட்ட அந்த அதிஅதிஅதி ரூபரூபரூப செளந்தரியவதி 'குபுக்'கென்று சிரிக்க, அந்தச் சிரிப்பால் அவர்கள் இருந்த பெட்டி பூராவும் 'குபீ'ரென்று வெளிச்சம் பரவுவது போன்ற ஒரு பிரமைக்கு உள்ளாகி அவர் திக்குமுக்காடுவாராயினர். அந்த திக்கு முக்காடலில், 'ஐயோ, இது என்ன? பினாகாபல் ஒளியோ, சிக்னல் பல் ஒளியோ தெரியவில்லையே? இவளுக்கு மட்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை ஒரு துளி இருந்துவிட்டால் போதும், இவளைக் கொண்டு போய் சினிமாவிலும் நடிக்க வைக்கலாம். ‘பைனான்ஷியர்'கள் சிலரைப் பைத்தியம் பிடித்து அலையவும் செய்யலாம். அதற்கு இந்தச் சனியன் இவளை விடாதுபோல் இருக்கிறதே? என்ன செய்யலாம்? அவளிடமிருந்து இவளை எப்படிப் பிரிக்கலாம்?' என்று அவர் யோசித்துக் கொண்டிருக்க, அதற்குள் காட்பாடி ஜங்ஷனுக்கு வந்த வண்டி அங்கே 'உஸ்'ஸென்று பெருமூச்சு