பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

வாட்டமுற்ற அவன் தன் சகாக்களை நோக்கி, ‘இத்தனை சகாக்கள் என்னுடன் இருந்து என்ன பிரயோசனம்? ஒரு பெண் இல்லையே, என் விரகதாபத்தைத் தீர்க்க!’ என 'ஏங்கு, ஏங்கு' என ஏங்க, ‘அந்தச் சனியன்கள் மட்டும் இங்கே வேண்டாம், எஜமானே! அவற்றால் எந்த ரகசியத்தையும் காப்பாற்ற முடியாது!’ என அவன் சகாக்களில் ஒருவன் அடித்துச் சொல்வானாயினன்.

‘அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில்தான் அரசாங்கத்தார்கூடத் தங்கள் ஒற்றர் படையில் பெண்களைச் சேர்த்துக் கொள்கிறார்களே?' என்று இன்னொருவன் எடுத்துச் சொல்ல, 'என்னதான் இருந்தாலும் நாம் அரசாங்கத்தார் ஆக முடியுமா? அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்; தட்டிக் கேட்க ஆள் கிடையாது!’ என்று மற்றொருவன் அடுத்துச் சொல்ல, ‘ஏன் இல்லை, எதிர்க் கட்சிக்காரர்கள் இல்லையா?' என்று மற்றும் ஒருவன் தொடுத்துக் கேட்பானாயினன்.

‘அவர்களுடைய வாயை அடக்க ஆளும் கட்சிக்காரர்களுக்கு வழியா இல்லை? எத்தனையோ வழிகள்!’ என கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்ன காடுவெட்டி, பொங்கிவரும் பெரு நிலவைக் கண்டு ஒருகணம் பெருமூச்சு விட்டு, மறுகணம் ‘பொக்'கென்று சிரிக்க, 'என்ன எஜமானே, சிரிக்கிறீர்கள்?’ என ஒருவன் அவனை வினாவுவானாயினன்.

‘இத்தனை நாளும் இந்த நிலவைக் கண்டால் எனக்குப் பிடிக்காது; இருட்டைக் கண்டால்தான் பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? இன்று என்னவோ தெரியவில்லை, எனக்கு நிலவைப் பிடிக்கிறது, ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது’ என்று தன் தோள்களை ஒரு குலுக்கு குலுக்கி விட்டுக் கொண்டு அவன் சிரிப்பானாயினன்.

‘இது என்னடா வம்பாய்ப் போச்சு, இதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லையே?’ என அவனுடைய சகாக்கள் அத்தனை பேரும் வானத்தைப் பார்க்க, அதுகாலை