பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

 ஆட்சியில் தமிழாம் என்றே
அரசினர் ஒருசொல் சொன்னார்
காட்சியைக் ’காக்‌ஷி’ என்னும்
கயவரும் தொழுது நின்றார்
மாட்சிமை என்று சொல்லி
மயங்கிடேல் தமிழ நாட்டீர்!
தோட்சுமை இறங்க வில்லை
தொழுதகை அனைத்தும் நன்றோ?


4


அரியணை தமிழுக் கென்றே
அரசினர் புகன்றா ரேனும்
புரிமொழி என்று சொல்லிப்
பிறமொழி புகுத்தல் காணின்
சரிஎன ஒப்பேல்! தக்க
சான்றவர் புலத்தால் ஆய்ந்த
முறையினால் கலைச்சொல் ஆக்க
முனைந்திடச் செய்தல் வேண்டும்

5


அரியணை ஏற்றி வைத்த
அரசுக்கு நன்றி சொல்லித்
திருமண நிகழ்ச்சி யாவும்
தெளிதமிழ் கேட்கச் செய்வீர்!
இறைமுனும் தமிழே கேட்க
இணைந்துநீர் தொண்டு செய்வீர்!
துறைதொறும் தமிழே காணின்
தூய்தமிழ் ஆட்சி என்போம்

139