பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏன் வரவில்லை?

அறுசீர் விருத்தம்

1

விண்ணிடத் தெறிந்த வெள்ளைப்
பூசணிக் கீற்றோ என்ன
எண்ணிடப் பிறங்கும் நல்ல
இளம்பிறை நிலவே ! என்னை
நண்ணிடத் துடிக்கும் பாவை
நானிவண் வந்த பின்னும்
மண்ணிடைப் பரப்பில் காணேன்
மங்கைஏன் வரவே இல்லை ?

2




கண்கவர் சிறுவர் சேர்ந்து
கடுமழைப் புனலில் ஓடப்
பண்ணிய கப்பல் போலப்
படர்பிறை நிலவே ! என்றன்
உண்ணிறைந் திருக்கும் செல்வி
ஓடிவந் திருக்கக் காணேன்
எண்ணிய தேதும் உண்டோ ?
ஏனவள் வரவே இல்லை ?


66