இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
73
செந்தமிழ் என் பவளாம் - நல்ல
செல்வக் குடி மகளாம்
முந்தை மொழி களிலே - அவளும்
மூத்தவ ளாய்ப் பிறந்தாள்
முந்திய மூ வரசர் - அவையில்
மொய்ம்புறத் தான் வளர்ந்தாள்
வந்தவர் யா வருக்கும் - செல்வம்
வாரி வழங் கிடுவாள்.
தென்ற லுடன் பிறந்தாள் - நல்ல
செய்கையொன் றே யறிவாள்
என்று பிறந் தவளோ? இவள்
எத்தனை ஆண் டினளோ?
இன்றும் இள மையுடன் - அன்னை
ஏற்றம் உறப் பொலிவாள்
ஒன்றிய நான்கு பெண்கள் - பெற்ற
ஒண்டொடியா மவளே.
கன்னடத் தான் துளுவன் - மலையன்
கண்டு மொழித் தெலுங்கன்
என்னுமிந் நால் வருக்கும் - அவரை
ஈந்து மணம் முடித்தாள்
பெண்ணெடுத் தே மகிழ்ந்தோர் - என்னைப்
பெற்றவ ளைப் பகைத்தார்
நன்னடைப் போக் கிழந்தார் - அந்த
நால்வரும் நன் றிகொன்றார்.