பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

85

ஒரு தலைவன் ஆவன். புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரி சம்பந்தமுடைய அதிகாரிகள் பலரை உறுப்பினராகக் கொண்ட நிலவரிக்கழகமாகும். இஃது ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது. வரிப்புத்தகம் என்போர் அரசனுக்கு ஒவ்வோர் ஊரினின்றும் வருதற்குரியனவும் நீக்கப்பட்டனவுமாகிய அரசிறைக்குக் கணக்குவைப்போர். பட்டோலைப் பெருமான் நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக்குறிப்பில் எழுதிவைப்போன். விடையிலதிகாரி என்போர், கிராமசபைகளினின்றும் பிற அதிகாரிகளிடத் திருந்தும் வரும் ஓலைகளைப் படித்துப்பார்த்து அவற்றிற்குத் தக்கவாறு விடையெழுதியனுப்புவோர் ; அன்றியும் அரசனது ஆணைத்திருமுகத்தை ஊர்ச்சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி பணிமக்கள் வாயிலாக அனுப்புவோரும் இவர்களேயாவர். திருவாய்க் கேள்வி என்போர் அரசன் திருவாய் மலர்ந்தருளிய வற்றைக் கேட்டுவந்து திருமந்திர ஓலையிடம் அறிவிப்போர். திருமந்திர ஓலை என்போர் அரசனது ஆணையை எழுதுவோர். இவர்களுக்குத் தலைவராயிருப்போர் திருமந் திரவோலை நாயகம் எனப்படுவார்.

இனி, இவர்களேயன்றி அரச காரியங்களை முட்டின்றி நடத்தும் கரும மாராயம் என்போரும் தலைநகரிலிருந்து வழக்காராய்ந்து நீதி செலுத்தும் அறங்கூறவையத்தாரும் அந்நாளில் இருந்தனர்.

ஆங்கிலேயராட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந்தோர்க்கு அவர்களது ஆற்றலையும் அரசியல் ஊழியத்தையும் பாராட்டி, 'ராவ்பகதூர் ' 'திவான்பகதூர்' 'சர்'