பக்கம்:முந்நீர் விழா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

முந்நீர் விழா

யில்- சிறந்த துகிலையும், மேலே சரிகைக் கரையிட்ட மேலாடையையும் புனைந்தார். காதில் நல்ல வைரக்கடுக் கன்களை அணிந்து கொண்டார். நல்ல தலைப்பாகையையும் சிறந்த 'காலணியையும் அணிந்து புறப்பட்டார்.

வல்லாளரின் இயல்பை அறிந்து கொள்ளக் கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருந்த புலவருக்கு இந்தச் செய்தி தெரிந்தது. சோதனையில் தம் பங்கில் அதிக லாபம் இருக்கும் என்று ஊகித்து மகிழ்ந்தார். வல்லாளர் காஞ்சிக்கு எந்த வழியில் போவார் என்று தெரிந்துகொண்டார். அவர் வாழ்ந்த ஊர் காஞ்சிக்கு அருகிலேயே இருந்தமையால், கால் நடையாகவே மன்னனைக் காணப் புறப்பட்டார் அவர்.

இன்னவாறு செய்ய வேண்டும் என்று திட்ட மிட்டுக் கொண்டு புலவரும் புறப்பட்டார். வல்லாளர் புறப்படுவதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டு அவர் புறப்படுவதற்கு முன்பே அவர் போகும் வழியே சென்று இடையே ஓரிடத்தில் வள்ளலின் வருகையை எதிர் பார்த்துக்கொண்டு நின்றார்,

வல்லாளர் அன்று தனியேதான் போனார். அருகில் உள்ள ஊருக்குத் துணை எதற்கு என்று புறப்பட்டுச் சென்றார், வழியில் புலவர் அவரைக் கண்டார். கும்பிடு போட்டார். "தங்களைக் காண்பதற்காகத்தான் வந்து கொண்டிருக்கிறேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போலத் தாங்கள் காட்சி அளிக்கிறீர்கள். என்னுடைய அவசரத்தில், இங்கேயே தங்களைக் கண்டு என் குறையை நிரப்பிக் கொண்டு போவது நல்லது தான்” என்றார்,

"நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார் வல்லாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/79&oldid=1207597" இலிருந்து மீள்விக்கப்பட்டது