98 ↔ புலவர் கா. கோவிந்தன்
அறிவற்றவர்; அன்று, நம் பெயரை இன்று ஏறு தழுவிய இப் பொதுவன் பெயரோடு இணைத்து அலர் கூறித் திரிந்தனர். அதில் தவறு இல்லை என்பதை அறிய மாட்டாது அவர்கள் அலர் கூறினார்கள் என்றால், அறிவன அறிந்த நம் தாயும் நம்மை அலைக்க வேண்டுமோ? அப்பெண்கள் கூறிய அலர் கேட்டு, அவள் கோல்கொண்டு அலைப்பதினும் கொடிதாகத், தன் இரு கண்களால் நம்மைக் கடுத்து நோக்கி அலைத்து விட்டாளே! அத்தாய் இன்று என்ன செய்வாள்? அன்று நம்மை வருத்திய பெற்ற தாயும், பிறந்த ஊராரும், பேரன்பு காட்ட வேண்டிய உறவினரும் இன்று வெட்கித் தலை குனியுமாறு நம் காதலனை நாம் அடைந்து விட்டோம்; இதைக் காட்டிலும் பேரின்பம் வேறு எங்கே உளது?" எனக் கூறி நடந்தாள். +. தோழிதான்் குறும்புக்காரி என்றால், அப்பெண்ணும் அவளுக்கு இளைத்தவள் அல்லள்! குறும்புத்தனத்தில் அவளினும் மிஞ்சியவள் அவள் விழா முடிவில் ஏறு தழுவிய இளைஞர்க்கும், அவ்வேற்றினுக்கு உரியரான கன்னியர்க்கும் இன்ன நாளில் திருமணம் நிகழும் எனப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது. அதுகேட்ட அப்பெண், "தோழி! இன்று ஏறு அடக்கிய இவனை முதன் முதலாக அன்று கண்டபோதே, என் நெஞ்சு என்னை அவனுக்குக் கொடுத்து விட்டது; அன்றே, நான் அவன் உரிய மனைவியாகிவிட்டேன்; அவ்வாறாகவும், அதை அறியாத நம் பெற்றோர், என்னை அவனுக்கு மணம் செய்து கொடுக்கப் புதிய நாள் குறிப்பிடுகின்றனரே? என்னே இப்புதுமை!” எனக் கூறி நகைத்தாள்.