| 3 |
அஞ்சுவானைப் புல்லாள்
தமிழகத்தின் பழம்பெரும் நாடாகிய பாண்டி நாட்டிற்குச் சிறப்பளிக்கும் சிற்றுார்களுள் அதுவும் ஒன்று. அஃது ஒர் ஆயர்பாடி, அவ்வூர் வாழ்வார்க்கு அன்று திருவிழா. அப்பாடியில் மணப் பருவம் பெற்ற மகளிர் சிலர்க்கு மணமகனைத் தேர்ந்தெடுக்கும் ஏறு தழுவும் விழா, அன்று அவ்வூரில் நடைபெற இருந்தது. அம்மகளிர் பால் காதல் கொண்ட ஆயர்குல இளைஞர் சிலர், தாம்தாம் காதலிக்கும் மகளிரை மணம் செய்து கொள்ளும் ஆர்வத்தால், அம் மகளிர்க்கு எனத் தனித் தனியே விடப் பெற்ற காளைகளை வென்று அடக்க முன் வந்தனர். காட்டிலும் மலையிலும் மலர்ந்து மணம் வீசும் பல்வகை மலர்களைப் பறித்துக் கொணர்ந்து மாலையாகத் தொடுத்துத் தலையிலும் கழுத்திலும் அணிந்து கொண்டனர். காடு கார்காலத்து மழை பெற்றுப் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்ட இளைஞர், ஆங்கு மலர்ந்து மணம்நாறும் கஞ்சங்குல்லை, கருநீலக் காயா, குருந்து,