முல்லைக் கொடி இ. 83
ஏறு தழுவும் நிகழ்ச்சி ஒருவாறு முடிவுற்றது; காளைகள் கட்டவிழ்த்து விடப்பெற்றன; தாம் தாம் விரும்பும் இடங்களில் புகுந்து புல் மேய அவை விரைந்து ஒடி மறைந்தன. ஆயர் மகளிரும், அம் மகளிர்க்குரிய காளைகளை அடக்கி, அம்மகளிர் கைப்பிடித்த ஆயர்குல இளைஞர்களும், தம் குல வழக்கப்படி, குரவைக் கூத்தாடுதற் பொருட்டு, ஊர்மன்று நோக்கிச் சென்றனர்.
பண்டு நம் பாராட்டினைப் பெற்ற அவ்விளம் பெண்ணின் காதலனும், அவளுக்கு என வளர்த்து விடப் பெற்ற காளையை வென்று அடக்கி விட்டான்; அவன் வெற்றி கண்டு அவளும் அவள் தோழியும் விம்மிதம் உற்றனர்; ஊர் மன்றம் அடைந்து, ஊர்ப் பெண்களோடு குரவைக் கூத்தாடத் தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் ஆடவும் பாடவும் தொடங்கி விட்டனர்.
கொல்லேற்றின் கோட்டினை ஏற்று வெற்றி கண்ட இளைஞன் மார்பைப் பாடிப் பாராட்டுவோம் வருக, எனத் தோழி அழைப்பதும் அப் பெண்ணின் காதுகளில் புகவில்லை.
காதலன் காளையை அடக்கி விட்டான், மணப் போட்டியில் அவன் வெற்றி பெற்று விட்டான்; இனி அவனை மணப்பது உறுதியாகி விட்டது; அந்நினைவால் அவள் உள்ளம் துள்ளிற்று. "தோழி! நெற்றியில் சிவந்த சுட்டி விளங்கும் நம் எருதின் ஆற்றலை அழித்து விட்டது நம் காதலன் மார்பு; அதனால் அம்மார்பு உற்ற துயரைத் துடைக்க, அம்மார்பை, இவ்வூர்ப் பெண்கள் அறிய, இன்றே அனைத்து மகிழ்வேன்; எம் காதல் விளை யாட்டைக் கண்டு, இவ்வூர்ப் பெண்கள் அலர் கூறிப்