பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மூவர் தேவாரம் - புதிய பார்வை திறத்தையும் சால்பினையும் அறிவுறுத்தி அருளுகின்றார். அவரை நோக்கி 'நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொன்ன மாலை பாடிப் போற்றுவாயாக' என பணிக்கின்றார். அப்பணி யினை ஏற்றுக் கொண்ட வன்றொண்டர் இறைவனை இறைஞ்சி நின்று 'பிரானே, மெய்யடியார்களின் வரலாறு அறியேன், அவர்தம் பெருந்தன்மையையும் உணரேன். இந்நிலையில் எங் ங்ணம் பாடுவேன்?' என்று விண்ணப்பிக்க, அம்மையப்பரும், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் (7.39) என்று அடியெடுத்துக் கொடுத்து மறைந்தருளுகின்றார். நம்பியாரூரரும் தேவாசிரிய மண்டத்தில் வீற்றிருக்கும் அடி யார்களை நெடுந் தொலைவிலே கண்டு தாழ்ந்து இறைஞ்சு கின்றார்; அவர்தம் திருப்பெயரை முறையே எடுத்தோதுகின்றார். அவர்கள் எல்லார்க்கும் தனித்தனியே 'அடியேன்” எனப் பணி மொழி பகர்ந்து, தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன், திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன், இல்லையே என்னாத இயற்பகைக்கு அடியேன், இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன், வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன், விரிபொழில்சூழ் குன்றையார் விறல்மிண்டர்க்கு அடியேன், அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன், ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அடியேன். (1) என்பது முதற் பாடலாக வருவது. இதில் பதினொரு பாடல்கள் உள்ளன. இத்திருப்பதிகத்தினைப் (7.39) போற்றித் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார் உள்ளம் மகிழ அவர்களின் நடுவே சென்று சேர்கின்றார். இப்பதிகத்தினைச் சற்று விரித்து நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலை (100 பாடல்கள்) அருளுகின்றார். இதனை மேலும் விரித்து 'திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தைச் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்கின்றார்.