பக்கம்:மேனகா 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாய்வதன் முன் பதுங்குதல்

57


வரா:- (அந்த இன்பத்தை விலக்க மாட்டாதவனாய் மதிமயக்கமடைந்து நகைத்த முகத்தோடு நின்று) ஐயோ பாவம்! நான் போகாவிட்டால் துரை நம்முடைய கட்சிக்காரனைத் தண்டித்து விடுவான். பணத்தை வாங்கிக்கொண்டு வக்கில் வரவில்லை யென்று கட்சிக்காரன் மண்ணை வாரி இறைப்பான் - என்றான்.

மேனகா:- மண்ணை வாரி இறைத்தால் அது இந்த ஊர் வரையில் வராது; எறிந்தவனுடைய கண்ணில் தான் படும். அந்தத்துரைக்கு ஏன் புத்தியில்லை? அவனை ஏன் நாம் முதலில் தண்டிக்கக் கூடாது?

வரா:- (புன்னகையோடு) எதற்காக அவனைத்தண்டிக்கிறது?

மேனகா:- கொலைக் குற்றத்துக்காக.

வரா:- (திகைத்து) அவன் யாரைக் கொலை செய்தான்?

மேனகா:- உயிராகிய உங்களை உடலாகிய என்னிட மிருந்து பிரித்து விடுவது கொலைக் குற்றமல்லவா! அவர்கள் கிழவியைக் கலியாணம் செய்து கொள்கிறவர்கள். அந்ததுரையும் ஒரு பாட்டியைக் கலியாணம் செய்து கொண்டிருப்பான். அதனால் நாம் அநுபவிக்கும் சுகம் அவனுக்கு எப்படி தெரியப் போகிறது. இளந் தம்பதிகளை நாமேன் பிரிக்கவேண்டும் என்ற இரக்கம் இல்லையே அவனுக்கு! - என்று பேசி மென்மேலும் உல்லாஸமாகப் பேசிக் கொண்டே இருந்தாள்.

வராகசாமி ஆனந்த மயமாய்த் தோன்றித் தனது மனையாட்டியின் மதுரமான விளையாட்டுச் சொற்களைக் கேட்டு மனங் கொள்ளா மகிழ்வை அடைந்தான்; அவளை விடுத்துப் பிரிய மனமற்றவனாய்த் தத்தளித்துத் தயங்கினான்; ஊருக்குப் போகாமல் நின்றுவிட நினைத்தான்.

அப்போது சாமாவையர், “அடே வராகசாமி! குதிரை வண்டி வந்து விட்டது. நாழிகை யாகிறது” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/75&oldid=1248708" இலிருந்து மீள்விக்கப்பட்டது