முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?
109
தங்களுடைய சம்சாரம் பிழைப்பது கடினம். இன்று மாலைக்குள் ஸ்மரணையை நான் திரும்பித்தருகிறேன். மார்பைக் கீறி உட்புறத்தை ஒழுங்குபடுத்தி, திரும்பவும் தைப்பது எளிய காரியமல்ல. அதில் அற்பமான தவறு ஏற்பட்டாலும் உடனே மரணம் நேருவது திண்ணம். அந்த அபாயகரமான வேலை எல்லோராலும் செய்யத்தக்கதல்ல. கைதேர்ந்த நிபுணர்களாலேயே அதை நாம் செய்விக்க வேண்டும். உண்மையை மறைப்பதில் பயனில்லை. அந்த அரிய காரியத்தைச் செய்வதில் எனக்கு அவ்வளவாக பழக்க மில்லை. இங்கே எனக்குக் கீழிருக்கும் இரண வைத்தியர்கள் ஆட்டை அறுப்பதற்கே தக்கவர்கள். அந்த அபாயகரமான காரியத்தை அவர்களிடம் ஒப்படைப்பது ஆபத்தாகும்; சென்னை புரசைப் பாக்கத்தில் டாக்டர் வில்லியம்ஸ் என்ற பெயருடைய துரை ஒருவர் இருக்கிறார். அவர் இந்த விஷயத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற மேதாவி, வேறு பலரிடத்திற்குப் போய் வீண் காலதாமதம் செய்ய வேண்டாம். உடனே அவரிடம் கொண்டு போவிர்களானால், அவர் ஒரு நொடியில் குணப்படுத்தி விடுவார். ஆனால் அவர் அதிகமாகப் பணம் கேட்கக் கூடியவர். இந்தக்காரியத்துக்கு அவர் குறைந்தது முன்னூறு ரூபா கேட்பார். அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதித் தருகிறேன். அதை அவரிடம் சேர்ப்பித்தால், அவர் அதிகமான சிரத்தை எடுத்துக் கொண்டு இந்தக் காரியத்தை முடிப்பார்: இருநூறு ரூபாய் பெற்றுக்கொள்வார்” என்றார். அப்படியே செய்வதாக சாம்பசிவம் ஒப்புக்கொண்டார்; உடனே டாக்டர், “சரி; மாலையில் ஏழு மணிக்குப் புறப்படும் வண்டியில் இன்றைக்கே போங்கள். போகும்போது நான் கடிதம் தருகிறேன்; நீங்கள் இவ்விடத்திலிருந்து நோயாளியை அலட்டுதல் கூடாது. சாயுங்காலம் வரையில் வெளியிலே போயிருங்கள்” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு அப்புறம் சென்றுவிட்டார். பிறகு சேவகன் ஒருவன் வந்து, “சுவாமிகளே!