பக்கம்:மேனகா 2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

மேனகா

சொல்லுவதுபோல அவர்கள் ஆடுவார்கள்; உடனே அந்த மாதிரியான கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு வருகிறேன். எல்லாவற்றிற்கும் நீர் சாமாவையருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடும்.

நைனா:- அவருக்கு என்ன மாதிரி கடிதம் எழுதுகிறது?

மந்திர:- “பெண் சம்மதிக்கு மென்று சொல்லிவிட்டுப் போனீர்கள். அறையில் பெண்ணை நீங்கள் விட்டுப்போன பிறகு நான் அங்கே போனேன். என்னைக் கண்டு பெண் நடுநடுங்கி, விஷயம் ஒன்றையும் அறியாதவளைப் போல் நடித்து, தன்னை விட்டு விடும்படி வேண்டினாள். நான் இணங்காமையால் அவள் என்னைப் பலவாறு தூஷித்தாள். அவளை நான் பலவந்தமாகப் பிடிக்கப்போனபோது, அவள் எனக்கருகிலும் வராமல் ஒடி ஒடிக் கடைசியில் மாம்பழம் அறுக்கும் கத்தியை எடுத்து அதனால் தன்னைக் குத்திக் கொள்ளப் போனாள். நான் அவளுக்கு அருகிலும் நெருங்காமல் தூரத்தில் நின்று, குத்திக்கொள்ள வேண்டா மென்றும், அவளை நான் வெளியில் அனுப்பிவிடுவதாகவும் சொல்லிவிட்டு வெளியில் போய்விட்டேன். அவளுடைய கூச்சலைக் கேட்ட என் மனைவி உடனே வந்து அவளை அழைத்துக்கொண்டு என்னுடைய மாமனார் வீட்டிற்குப் போய்விட்டாள். இப்போதும் அவள் ஜுரத்தோடு அவ்விடத்திலிருக்கிறாள். அவள் திரும்பவும் உங்கள் வீட்டுக்கு வந்தால், அது உங்களுக்கு அபத்தமாய் முடியும். இந்தக் கடிதத்தைக் கொண்டு வருகிறவர் ஒரு மந்திரவாதி. இவருடைய உதவியால் அந்தப் பெண்ணை வசியம் செய்து திரும்பவும் நான் அழைத்துக் கொள்ளப் போகிறேன். மேல் விவரங்களை இந்த மனிதர் சொல்லுவார்” என்று ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடும்; நான் இப்போதே போய் காரியத்தை ஒரு நொடியில் முடித்துக் கொண்டு வருகிறேன்- என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/187&oldid=1252346" இலிருந்து மீள்விக்கப்பட்டது