பக்கம்:மேரியின் திருமகன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நானென்று முன்வந்தாள், நடந்ததைச் சொன்னாள்
உன்நம்பிக்கை வென்றது என்று வாழ்த்தினார்

உண்ண உறங்க அவருக்கு நேரமில்லை
பிணியாளர் அவர்கருணைக்கு பிணங்கி நின்றனர்
துன்புற்ற மக்கள் துணை என்று வந்தனர்.
என்னே இவன் பின்னே உலகம் ஓடுகிறதென
எரிச்சல் பட்டார் பரிசேயர் சதுசேயர்.

மலைச்சாரல் அருளுரை

ஒலிவ மலைக்குன்றில் ஒன்று கூடினர் மக்கள்
ஆண்டவர் ஆங்கே திருவாய் மலர்ந்தருளினார்

“எளிய மனத்தோரே நீங்கள் பேறுபெற்றீர்
ஏனெனில் இறையரசு உங்களுக்கே ஆகும்

துன்புற்றவரே நீங்கள் பேறுபெற்றீர்
உங்கள் துன்பம் துடைக்கப்படும்

சாந்தம் உள்ளவரே நீங்கள் பேறுபெற்றீர்
உங்கள் வாழ்வு நிறைவு பெறும்

இரக்கமுடையீர் இரக்கம் பெறுவீர்.

எனக்காக உங்களைத் தூற்றுவார் தூற்றட்டும்
பொறுத்திருங்கள் உங்களை உலகம் போற்றும்

உணவுக்கு உப்புபோல் உலகுக்கு உதவுக.
சாரமற்ற உப்பு சகதியிலே கொட்டப்படும்.