பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. உணவும் உடையும்

விளைபொருள்கள்

சிந்து ஆற்றுவெளி பருவ மழையும் ஆற்றுப் பாய்ச்சலும் சிறப்புறப் பெற்று விளங்கியதாகும். ஆதலின், அங்கு இருந்த நிலங்கள் செழிப்புற்று இருந்தன; வண்டல் மண் படிந்திருந்தன: சிறந்த மருதநிலங்களாக விளங்கின. ஆதலின், அங்குக் கோதுமை, நெல், வாற் கோதுமை (பார்லி), பருத்தி, பட்டாணி, எள், பேரிந்து, முலாம்பழம் முதலியன ஏராளமாகப் பயிராக்கப்பட்டன. இன்றும் அப்பகுதிகளில் நெல்லும் கோதுமையும் சிறப்புடை விளை பொருள்களாக இருத்தல் கவனிக்கத் தக்கது. இப்பலவகை விளைபொருள்களை அப்பண்டை மக்கள் தாழிகளிற் சேமித்து வைத்திருந்தனர்.அத்தாழிகள் நிலத்தில் பாதியளவு புதைக்கப் பட்டிருந்தன.

மருத நிலமும் நகர் வளமும்

இங்ஙனம் மருத நிலப்பண்பு மிகுதிப்பட்ட சிந்துவெளியில், நகரங்கள் செழிப்புற்று இருந்தன என்பதில் வியப்பொன்றும் இல்லை அன்றோ? ஆற்றுப்பாய்ச்சல் பெற்ற மருத நிலமே, மக்கள் நாகரிக வாழ்க்கை நடத்த ஏற்றதெனத் தமிழ்நூல்களும் சான்று பகர்கின்றன. அங்குத்தான் அழகிய நகரங்களும் கோட்டை கொத்தளங்களும் அமைக்கப்படுதல் பெருவழக்கு ஆரியர், சிந்து-கங்கைச் சமவெளிகளில் நூற்றுக்கணக்கான அநாரியர் நகரங்கள் இருந்தன என்று ரிக் வேதத்தில் கூறியிருத்தலையும் சிந்து வெளியில் சுமார் 3200 கி. மீ. தொலைவு சுற்றிப் பல பண்டை நகரங்கள் மண் மூடு பட்டுக் கிடக்கின்றன; அவற்றைத் தோண்டி ஆராய்ச்சி நட்த்துதல் வேண்டும் என்று அறிஞர் பானர்ஜீ தம் அறிக்கையிற் கூறியிருத்தலையும் நோக்க, சிந்துப் பிரதேசத்தின் வளமும் அவ்வளப்பங் காரணமாகப் பல நகரங்கள் அங்கு அமைக்கப்பட்டமையும் நன்கு விளங்கும்.