பக்கம்:ரமண மகரிஷி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ரமண மகரிஷி




திடீரென ஒருநாள் ஒரு கூத்தாடி மானாமதுரையிலே உள்ள அழகம்மையின் கணவனது தம்பியிடம், ‘வெங்கட்ராமன் திருவனந்தபுரத்திலே தங்கிக் கூத்தாடி வரும் ஒரு நாடகக் குழுவிலே சேர்ந்து கூத்தாடுகிறான் என்பதைச் மூச்சு மேலும் கீழுமாக வாங்க ஓடி வந்து கூறினான்.

உடனே அழகம்மை தனது மைத்துனர் நெல்லையப்பரை அழைத்துக் கூத்தாடி கூறியது செய்தியா? வதந்தியா? என்றறியச் செய்தாள்! நெல்லையப்பர் போன சுவடுகள் தெரியாமல் திருவனந்தபுரத்தில் இருந்து ஏமாந்த முடிவோடு திரும்பினார். ஆனாலும் முன்னூறு நாட்கள் சுமந்து பெற்ற அன்னையாயிற்றே தானே! அதனால்தான் தாய் மிகவும் சோர்ந்தாள். தனது மகனைக் காணவில்லையே என்று!

வெங்கட்ராமனுடைய தமையனாரான நாகசாமி, தனது தம்பியைத் தேடி அலுத்துப் போய், பிறகு தனது கல்வியை முடித்துக் கொண்டு, மதுரையிலே உள்ள ஒரு ரிஜிஸ்தர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணமாயிற்று அவருக்கு. ஓரளவுக்கு தாய் மன ஆறுதல் பெற்றிட நாகசாமி திருமணம் பெரிதும் உதவியாக இருந்தாலும், பெற்ற மகனை மறக்க முடியுமா அந்த தாயால்?

கொஞ்ச காலம் சென்றது. தந்தைக்குப் பிறகு அக்குடும்பத்துக்குப் பெரிதும் உதவியாக இருந்த சித்தப்பா சுப்பய்யர் காலமானார். மதுரையில் அவருடைய இறுதிச் சடங்கு நடந்தது.

சுப்பய்யர் காரியச் சடங்குகளுக்காக எல்லா உறவினரும் மதுரை மாநகரிலே கூடியிருந்தார்கள். அப்போது திருச்சுழியைச் சேர்ந்த ஓராள் நாகசாமியிடமும் அழகம்மையிடமும் ஓவென்று கத்திக் கொண்டு ‘வெங்கட்டு அகப்பட்டு விட்டான், வெங்கட்டு அகப்பட்டு விட்டான்’ என்று ஓடி வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/66&oldid=1281044" இலிருந்து மீள்விக்கப்பட்டது