“சரி, எதற்கும் நான் சேர்த்து வைத்திருக்கிற பணத்திலே ஐந்து ரூபாய் எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டுத் தன்னுடைய மேஜை அறையைத் திறந்தாள் மீரா ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு, கமலாவுடன் புறப்பட்டாள்.
இருவரும் அந்தக் குடிசையை நோக்கிச் சென்றனர். குடி சையைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. கமலாவும் மீராவும் வேலி ஒரமாக நின்று உள்ளே பார்த்தார்கள். அங்கே ஒரு மண் தொட்டியில் மிகவும் அழகான ஒரு ரோஜாச்செடி இருந்தது.
“அதோ அந்தச் செடிதான். எப்படி இருக்கிறது. பார்த்தாயா !” என்று கேட்டாள் கமலா.
“ஆஹா! அந்தச் செடி எவ்வளவு அழகாயிருக்கிறது! எத்தனை பூக்கள்! அது எனக்குக் கிடைத்தால் நிச்சயம் பரிசு எனக்குத்தான்” என்றாள் மீரா.
உடனே வேலிக் கதவைத் திறந்தாள், கமலா.
“யாரது?” என்று கேட்டுக்கொண்டே பார்வதியின் அம்மா குடிசையிலிருந்து வெளியே வந்தாள்.
“ஏனம்மா, நாங்கள்தான். பார்வதி இல்லையா?” என்று கேட்டாள் கமலா.
"கடைவீதிக்கு மண்ணெண்ணெய் வாங்கப் போயிருக்கிறாள். என்ன விஷயம்?” என்று கேட்டாள், அந்த அம்மா.