பக்கம்:ரோஜாச் செடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“ஒன்றுமில்லை. இவள் யார் தெரியுமா? மிராசுதார் முருகேச பிள்ளை மகள் இவள்தான். பெயர் மீரா” என்று மீராவை அறிமுகப்படுத்தி வைத்தாள் கமலா.

“அடடே அப்படியா . . . . . ஆமாம். பார்வதியை எதற்காகத் தேடி வந்தீர்கள் ?” என்று கேட்டாள் அந்த அம்மாள்.

உடனே கமலா ஒரு சின்ன உதவி வேணும். இவள் அருமையாக ஒரு ரோஜாச் செடி வளர்த்து வந்தாள். அதைப் புஷ்பக் காட்சியிலே வைக்கவேண்டுமென்பது இவளுடைய அப்பாவின் ஆசை. ஆனல் எதிர் பாராமல் ஒன்று நடந்து விட்டது. இவளுடைய தம்பி படுசுட்டி. அவன் இன்றைக்குக் காலையிலே விளையாட்டாக அந்தச் செடியைப் பிடுங்கி, ஒடித்துப் போட்டுவிட்டான். இவள் அப்பாவுக்கு இந்த விஷயம் இதுவரை தெரியாது. தெரிந்தால், பாவம், அந்தச் சின்னப் பையனைப் போட்டு அடிஅடி யென்று அடித்து விடுவார் ! அப்பா பார்ப்பதற்கு முன்னாலே, வேறு ஒரு ரோஜாச் செடியை வாங்கி, அந்தத் தொட்டியிலே வைத்துவிட வேண்டும். உங்கள் வீட்டில் ரோஜாச் செடி இருப்பது இவளுடைய அம்மாவுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அதனால்தான் எங்களை இங்கே அனுப்பி வைத்தார்கள்” என்று சாமர்த்தியமாகப் புளுகினாள்.

இதைக் கேட்டதும் அந்த அம்மாள், “என்ன! ரோஜாச் செடியையா கேட்கிறீர்கள்? வேண்டாம் வேண்டாம். வேறே எதைக் கேட்டாலும் தரலாம். பார்வதி கண்ணைப் போல ரோஜாச் செடியை வளர்த்து வருகிறாள். அதைமட்டும் கேட்காதீர்கள்... ஐயோ, பார்வதி வந்தால் என்னைச் சும்மா விடுவாளா?” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/9&oldid=482475" இலிருந்து மீள்விக்கப்பட்டது