பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

39

கயிறு கட்டி இறுக்கிக் கொண்டிருப்பதை அவர் சாகும்வரையிலும் என்னிடம் கூறவில்லை. பாவம்! ஆனால் அவரது சாவு அவரைத் தேடி வருவதும், நாடிவந்து நாடி நரம்புகளை நொருக்குவதும் அவருக்கு சிறிது சிறிதாகப் புரிந்தது!”

‘இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவருக்குத் தூக்கக் கலக்கம் போன்ற ஒரு மயக்கம் வந்தது; அப்போது அவர் திடுக்கிட்டுக் கண்விழித்து’ என்ன இது என்று கேட்டார். அப்போதுதான் தான் பிறந்த மண்ணை விட்டுப் பிரியப் போவதை அவர் உணர்ந்து கொண்டார். நிக்கோலசுக்கே மரணத்திலே இருந்து மீள்வதற்குரிய மார்க்கம் தெரியவில்லையே! எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?...

எனவே, “இருக்கும்வரை இன்பமாக இரு பிறருக்கு உதவி செய்” என்று எளிமையாக எவரும் அறிவுரைகளையும் அறவுரைகளையும் கூறலாம்; அது சுலபமும் கூட! ஆனால், அதைக் கேட்பவர்களுக்கு வியப்பாகவே விளங்கும். ஆனால், பிறருக்கு உதவி, புரிவது; நல்லொழுக்கம், இன்பம் எல்லாமே ஒரு சத்தியத்தில் உள்ளன.

“முப்பத்திரண்டு ஆண்டுகள் இந்த உலகத்திலே! வாழ்ந்துள்ளவன் நான்; என்னுடைய வாழ்க்கையின் நிலைமை மிகப் பயங்கரமானது என்ற உண்மையையே நான் அறிந்திருக்கிறேன்.” என்று டால்ஸ்டாய் தான் எழுதிய கடித இலக்கியத்தில் வரைந்திருக்கிறார்.

இந்தக் கடிதத்தில் லீயோ, தனது அண்ணனை இழந்த துயரத்தையும், துன்பத்தையும், மயான வைராக்கியம் என்பார்களே அதுபோல குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது அவரது மன வளர்ச்சியைக் காட்டுகிறதே அன்றி; வாழ்க்கையின் பொருளையோ, பயனையோ அவர் அறியவில்லை என்பதல்ல. ஆனாலும் வாழ்க்கை என்பது பயனற்றது தானே? என்ற கேள்வியும் அவரது மனத்தைக் குத்திக் குடைந்திருப்பதும் தெரிகிறது அல்லவா?