கா. கோவிந்தனார் - 43 எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணை 72வது செய்யுளை இயற்றிய இளம்போதியார் என்ற புலவர் ஒரு பெளத்தராவர் என்பது அவர் பெயராலேயே தெரிகிறது: மணிமேகலை பெளத்த காவியத்தை இயற்றி யவரும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந் தொகை நூல்களுள் இடம்பெறும் செய்யுள்களுள் பல செய்யுள்களை இயற்றியவரும் ஆகிய கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் ஒரு பெளத்தராவர். இலங்கைப் பாதபங்கய மலையைக் கண்டு வந்தவரும், காவிரிப்பூம்பட்டினத்துப் பெளத்தப் பள்ளியின் தலைவராக இருந்து, மாதவிக்கும் அவள் மகள் மணிமேகலைக்கும் தரும உபதேசம் செய்தவரும், மணிமேகலையைச் சிறை வீடு செய்தவரும், காவிரிப் பூம்பட்டினம் கடல் கொண்ட பின்னர், வஞ்சி மாநகரம் சென்று சிலகாலம் இருந்து பின்னர் காஞ்சி மாநகரம் அடைந்து, ஆங்கு வந்த மணி மேகலைக்கு அறம் உரைத்தவருமாகிய அறவண அடிகள் ஒரு பெளத்தராவர். மேலும், மணிமேகலைக் காப்பியத் தலைவியாகிய மணிமேகலை சிறந்த பெளத்த பிக்குணி ஆவள்; ஆகவே, கடைச் சங்க காலத்தில், பெளத்தம், தமிழகத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்து என்பது தெளிவாகிறது. - - கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் புகுந்த பெளத்த பிக்குகள், தமிழகத்தில் ஆங்காங்கே பெளத்த விகாரைகளையும், பள்ளிகளையும் நிறுவிக் கொண்டு, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மக்களிடையே பிரிவுணர்ச்சியை வளர்க்காது, அவர்கள் மீது அன்பையும், அருளையும் சொரிந்து, இலவசக் கல்வியும் மருத்துவமும் அளித்தல், குருடர், செவிடர், முடவர் போன்றார்க்கு உண்டி, உடை, உறையுள் அளித்தல் போலும் அறப்பணிகள் ஆற்றி வந்தமையால், அவர்கள் மக்கள் உள்ளத்தில் அழியா