பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வனதேவியின் மைந்தர்கள்

கங்கை குறுகலாகத் தெரிகிறது. படகோட்டி ஒருவன் சிறு படகைத் தயாராக வைத்திருக்கிறான். அக்கரை கரும்பச்சைக் கானகம் என்று அடர்த்தியாக விள்ளுகிறது.

சுமந்திரர் படகில் ஏறவில்லை. இளையவர் மட்டுமே இருக்கிறார். காலை நேரத்து வெளிச்சம் சிற்றலைகளில் பிரதிபலிப்பது வாழ்க்கையின் கருமைகள் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையாக உள்ளத்தில் படிகிறது. ஆழங்காணாத கிணற்றில் தன் கையைக் கொண்டு தரைக்காகத் துழாவுவது போல் எதிர்க்கரையை வெறித்துப் பார்க்கிறாள்.

அக்கரையில் மனித அரவமே தெரியவில்லை. ஒன்றிரண்டு பறவைகள், வெண் கொக்குகள், பறந்து செல்கின்றன. பெரிய அடர்ந்த மரங்கள். கதம்ப மரங்கள். ஓங்கி உயர்ந்த மருத மரங்கள். அவர் இறங்கி முன்னே செல்கிறார். அவளைத் தொடர்ந்து வர்ப் பணிப்பது போல் நின்று நின்று பார்த்துச் செல்கிறார். குற்றிச்செடிகள் ஒற்றையடிப் பாதைகள். மா, ஆல், அத்தி, என்று பல்வேறு மரங்கள் கானகத்துக்கே உரிய மனங்கள். பல்வேறு பறவைகள். இவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவைபோல் வெவ்வேறு குரல்களில் ஒலி எழுப்புகின்றன.

மிகப்பெரிய ஆலமரம் ஒன்று பெரிய பெரிய விழுதுகளுடன் அங்கே பரந்திருக்கிறது.

“ஆகா! ஏதோ மன்னர் அரண்மனை போல் இல்லை?” பூமகள், முதன் முதலாக எழுப்பும் குரல் அது. இளையவர் நிற்கிறார்.

“ஆம், தேவி! இனி இதுவே தங்கள் அரண்மனை” பச்சை மரத்தில் ஒரு கத்தி செருகினாற் போன்று அந்த விடை பதிகிறது. அவள் சட்டென்று அந்த முகத்தில், அந்தக் குரலில் செருகப்பட்ட இரகசியத்தைப் பற்றிக்கொள்கிறாள். இதுகாறும் இழைந்த இழை, அறுந்து தொங்குகிறது.

“இது மன்னர் ஆணை,தேவி. என்னை வேறெதுவும் தாங்கள் கேட்காமல் மன்னித்தருளுங்கள்!”