126
வனதேவியின் மைந்தர்கள்
“என்னை அதுபற்றிச் சிந்திக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுத் தாங்கள் பேசுகிறீர்களே?”
“இல்லையம்மா.
வையம் குளிர்ந்தெழ, கான்பகங்குடைவிரிய,
நெஞ்சில் அன்பு சுரக்கும்; பஞ்சமில்லை; பசியுமில்லை.”
ஒற்றை நாணின் ஒலியில் வையமே ஒன்றுவதுபோல் தோன்றுகிறது. எங்கோ வானவெளியில் சஞ்சரிப்பது போல் அவள் காற்றைப்போல் இலேசாகிறாள். யானைக்கூட்டத்தின் மிக அருகே அவர்கள் செல்கிறார்கள். பூமகள் பயிற்சி பெற்ற யானைகளின் அணி வகுப்பைப் பார்த்திருக்கிறாள்.
பொன்னின் முகபடாம் தரித்த பட்டத்து யானை மீது, பொற்பிடப் பட்டு ஆசனத்தில் அவள் ஏறி அமர்ந்து ஊர்வலம் வந்திருக்கிறாள். இப்போது அதை எல்லாம் நினைத்து உள்ளுற நாணி, வருத்தம் கொள்கிறாள்.
அருகில் வரும்போதுதான், யானைகளின் முதுகுகளில் படிந்த செம்புழுதியும், ஒருவித வாசமும், இவை திருந்தா யானைகள் என்ற உணர்வைத் தருகின்றன. முரட்டுத்தனமாக ஒன்றையொன்று விஞ்சிக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன. ஒரு தாய் யானை, சிறு குட்டியை இரண்டு கால்களுக்கிடையில் பாதுகாப்பது போல் நடந்து செல்லும் விந்தையைப் பார்க்கிறாள். முன்னே செல்லும் கரிய கொம்பன், தலைவன் போலும் அது முன்னே சென்று, சிறிது நேரத்துக்கொருமுறை திரும்பிப் பார்த்து நின்று கூட்டம் தொடருகிறதா என்று பார்க்கிறது.
மான் கூட்டமும் இப்படித்தான். ஒரு தலைவர், அல்லது மன்னர், வழிகாட்டலில் எதிர்ப்புகளை, இன்னல்களை வென்று முன்னேறி, உணவு தேடிப்பசியாறி, இனம் பெருக்கி.
அவள் அம்மையின் அரவணைப்பில் அபாயம் அறியாமல் திமிறிச் செல்லும் குட்டியையே பார்க்கிறாள்.அந்தக் குட்டியைப் பற்றி அதைக் கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது.