பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வனதேவியின் மைந்தர்கள்


நந்தமுனி கொம்பனைத் தட்டிக் கொடுக்கிறார். அது துதிக்கையை நீட்டுகிறது. அவர் இரண்டுக் கனிகளை முடிந்து அரைக்கச்சில் வைத்திருக்கிறார். அதைக் கொடுக்கிறார்.

யானை அதை வாங்கி வாயில் போட்டுக் கொள்கிறது. பிறகு, தழைந்து குனிந்து, முன் காலை மடித்து, படி போல் நீட்டுகிறது.

“குழந்தாய், இந்தக் கொம்பன் ஒன்றும் செய்யாது. ஏறிக் கொள்.”

அவள் கையைப் பற்றி வந்து, துதிக்கையைத் தடவிக் கொடுக்கச் சொல்கிறார். முன்னங்காலைத் தடவிவிட இன்னம், இன்னம் என்று காட்டுகிறது. பிறகு நன்றாக அமர, முதுகைத் தடவி விடுகிறாள்.

“பார்த்தாயா மகளே? இவற்றுக்கு நம் அன்பு வேண்டும். ஆனால் நாம் அன்பு செய்யாமல் கொலை வெறி ஊட்டுகிறோம்; நாசம் செய்யத் துரண்டுகிறோம். ஒவ்வோர் உயிரும் வாழத்தான் உயிர்க்கிறது; உண்டு இனம் பெருக்கி, மடிந்து உயிர்ச்சங்கிலியை மாயாமல் வைக்கிறது. இதுதான் இயற்கை நமக்குச் சொல்லித்தரும் பாடம்.”

“மத்தா, கஜராஜா, இவளை முதுகிலேற்றி வருகிறாயா? உன்னால் முடியுமே? பலவீனருக்கு உதவுவது உன் தர்மமாயிற்றே?”

பூமகளுக்கு, என்றுமில்லாமல் ஓர் உவகை மலர்கிறது. அடிமனதில் கனத்தோடு கூடிய ஒரு மரியாதை மேவுகிறது. அதன் முதுகில் ஏறி அமருகிறாள். “மத்தா, உன் குறும்பையோ, ஆட்ட பாட்டத்தையோ தாங்க மாட்டாள். ஒர் உயிரைச் சுமக்கிறாள். கவனமாகச் செல்..” என்று உரைக்கிறார்.

அது அடி எடுத்து வைக்கையில் அவள் அஞ்சி அதன் பிடரியைப் பற்றிக் கொள்கிறாள். மரக்கிளையில் ஊஞ்சலாடுவதுபோலும் குலுங்குவது போலும் விழுந்து விடுவது போலும் அச்சம் பரபரக்கிறது. மத்தன் அவளை ஏற்றி இருக்கும் உற்சாகத்தில் கர்வம் கொண்டு நடந்து செல்வது போல் தோன்றுகிறது. நந்தமுனி பின் தங்கிவிட்டார்.