166
வனதேவியின் மைந்தர்கள்
“என்ன? வேதபுரிச் சாலியரா?...”
இல்லை. வந்தவர்கள் முப்புரிநூல் விளங்கும் அந்தணப் பிள்ளைகள். ஒரு சிறுவனைத் துக்கி வந்திருக்கிறார்கள். அவன் விலாவில் அம்பு பாய்ந்து இருக்கிறது.
பூமிஜா திடுக்கிடுகிறாள்.
“யார். யார் செய்தது?”
“இந்த குலம் கெட்ட பயல் இப்படி பிரும்மஹத்தி செய்திருக்கிறான்...” சம்பூகன் அருகில் சென்று அந்த அம்பை எடுக்கிறான். காயம் பெரிது இல்லை. அது பேருக்குத் தொத்தி, சிறிது காயம் விளைவித்துக் குருதிச் சிவப்பு தெரிகிறது.
“இதோ, இவன், இந்தச் சண்டாளன் செய்தான்!” என்று ஆங்காரத்துடன் கத்துகிறான் பெரியவனாகத் தோற்றும் அந்தணன். பூமிஜா குலை நடுங்க, செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.
நகரமெருகு தெரியும் தோற்றம். அரையாடை, மேலாடை, என்று விள்ளும் நாகரிகம். செவிகளில் குண்டலங்கள். குடுமி விளங்கும் நெற்றி பளபளக்கும் சினம். அடிக்கொருமுறை சண்டாளர், சண்டாளர் என்ற சொற்கள் தெரிக்கின்றன. சண்டாள குரு, சண்டாள முனி... அந்தணப் பிள்ளையை அம்பெய்திக் கொல்ல எத்தனை துணிச்சல்? தருமங்கள் செத்துவிட்டன. கேட்பார் இல்லை! இவர்கள் வேதமோதுவதும், கவிபாடுவதும் தர்மதேவதையைக் காப்பாற்றவா? சத்தியமுனிக்கு முகம் சிவக்கிறது.
முன்னே வருகிறார்.
“அந்தணப் பிரபுக்களே! எங்கள் யாரிடமும் இது போன்று நுனியில் இரும்பு முனை கூர்த்த அம்பே இல்லையே? ஏன் அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர்கள்? எங்கள் சம்பூகனுக்கு, வில்லும் அம்பும் பரிசயமே இல்லையே? அவனுக்கு