பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

169

என்ற மூதாட்டி வருகிறாள். உடல்தளர்ந்து முடி நரைத்துக் கண்கள் சுருங்கி இருந்தாலும் பேச்சு தெளிவாக இருக்கிறது.

“குழந்தே... நீதான் வனதேவியா?... உன் பிள்ளைகளா இவர்கள்? ராசகுமாரர்களைப் போல் இருக்கிறார்கள். நீயும் ராசகுமாரிதான். இதே இடத்தில் முன்னே குருமாதாவாக ஒரு ராசகுமாரி வந்தாள். அவள் உன்னைப்போல் இருப்பாள். அப்போதுதான், எனக்கு நினைப்பிருக்கிறது. ராசா வந்து இங்கே முதல்ல உழவோட்டுறார். நாங்கல்லாம், இங்கே ஏர் செல்வதை வேடிக்கை பார்த்து நிப்போம். ராசா வராரு ஆறுதாண்டிவராங்க சனமோ சனம். ராசா தங்க ஏர் புடிச்சி உழுறப்ப...”

பூமகள் அந்தக் கிழவியின் முகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறாள். “பொட்டி... பொட்டி வந்திச்சி. அதில், பட்டுத்துணி வச்சி ஒரு அழவான புள்ள... ராசா கொண்டுட்டுப் போனாரு அப்பல்லாம் அந்தக்காடு இந்தக்காடுன்னு போக்குவரத்தில்ல. இங்க வந்து நாங்க பாக்குறப்ப, குருமாதா இல்ல... அவுங்க மனிசப்பெறப்பே இல்ல. தேவதை வந்திருந்ததுன்னு சொல்லுவோம். அந்த தேவதைதான் மறுக்க புள்ளயா பூமிக்குள்ளாற போயிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டோம். வனதேவிக்குப் பூசை வச்சோம். உன்ன மாதிரிதா அவங்க வந்தாங்க. நா ரொம்ப சின்னவ... இத இங்க உக்காந்து, பூவெல்லாம் பறிச்சி மாலை கட்டி எனக்குப் போடுவாங்க...”

அவளுக்கு உடல் சிலிர்க்கிறது.

“குருமாதான்னு சொன்னா... யாரு?”

“இந்த சாமிதா, இங்க கூட்டி வந்தாங்க. அவங்க தாய் சொல்லி இருந்தாங்க. வாழை வனத்தில் யானை வந்தது. அது மிதிச்சி அடக்கமாயிட்டாங்க. இங்கதா பொதச்சாங்க எனக்கு அதெல்லாம் நினைப்பில்ல... சாமி வந்தபிறகுதான் நாங்கல்லாம் இங்க ஒண்ணா உக்காந்து பாடுவோம்...”

அன்னையின் குரல் கேட்கிறது. பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வருகிறாள்.