பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

175

"வனதேவி! தாயே! அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வீர்! இவர்கள் எல்லோரும் உன் மைந்தர். நிரபராதிகள் வீழக்கூடாது. என்னை உன் மடியில் கொண்டு சேர்த்து, பழியையும் பாவத்தையும் வாழ்நாள் முழுவதும் அநுபவிக்கிறாரே, அந்தத் தண்டனையே போதும். இன்னும் பழிபாவம் நேரிடவேண்டாம்...” என்று உள்ளுற இறைஞ்சுகிறாள்.

இடையே ஓர் ஆசைக் குறுத்தும் குறுகுறுக்கிறது.

“நான்தான், மண்ணாசை, கொல்லும் திறன், எல்லாம் துறந்து, வருகிறேன். தேவி, உன் விருப்பப்படியே வன்முறை இல்லை என்பதற்கடையாளமாக, அந்நாள் வில்லொடித்தது போல் ஒடித்தேன்” என்று சொல்ல வருகிறாரோ? படைகள், ஆடம்பரங்கள், பணியாளர், மனமழிக்கும் ஆசைகள் எதுவும் இல்லாமல் இயற்கையின் நியதிகளில் குறுக்கிடாமல் அன்பு கொண்டு வாழ முடியாதா?... இதோ உங்கள் மைந்தர்கள். முனிவர் இவர்களை அஜயன்-விஜயன் என்றழைக்கிறார். இங்கே வாழ்க்கைதான் வேள்வி. பகிர்ந்துண்ணும் மாண்பு. எவரையும் பட்டினி கிடக்கவிடுவதில்லை. இங்கே வில்வித்தை, மல்யுத்தம் எல்லாம் தற்காப்புக்கு என்றுதான் முனிவர் பயிற்றுவிக்கிறாராம். வேள்வி என்று சொல்லி, ஆவினங்களைக் கொன்று நிறைவேற்றுவதில்லை.

அவள் மனத்திரையில் மின்னற் கோடுகளாக இந்த வாசகங்கள் பளிச்சிடுகின்றன.

அவள் சோகமே உருவெடுத்தாற்போன்று நிற்கையில் பிள்ளைகள் ஓடிவருகிறார்கள். அவள் பாதங்களில் விழுந்து நீலன் கதறுகிறான்.

“...தேவி, வனதேவி? ஏனிப்படி ஆயிற்று? சம்பூகன்... சம்பூகன் போய்விட்டான். ஓர் அம்பு பாய்ந்து அவனை வீழ்த்திவிட்டது...”

பிள்ளைகள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.

அவள் அலறல் கானகமெங்கும் எதிரொலிக்கிறது.