பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடக்கும் தெற்கும்

11


நெறியும் அமைந்த வகையைக் காண்பதும் வரலாற்றுக்கு ஏற்பனவாகும். இவ்வாறு காணும்போது தமிழ் நாட்டில் கடைச்சங்க காலத்துக்கு முன் தெளிந்த வரலாறு இல்லை. வடக்கிலும் மெளரியப் பேரரசுக்கு முன் - அலெக்சாந்தர் படையெடுப்புக்கு முன் - வரையறுத்த வரலாறு இல்லை. அக்காலத்துக்கு முன் உள்ள சில வரலாற்றுச் சிதறல்களே நமக்கு இங்குத் தேவைப்படுவன. எனவே, தெளிந்த வரலாற்றுக் காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன் சுமார் மூவாயிரமாண்டுக் காலத்தும், அதற்கு முன்பும் வடக்கும் தெற்கும் எவ்வெவ்வகையில் இணைந்து நின்றன என்பதைக் காண வேண்டுவதே நம்முடைய பணியாகும். இந்தத் துறையை இவ்வாறு வரையறை செய்து கொண்டு யாரும் இது வரையில் ஆராய்ச்சி செய்யவில்லை என்றாலும் பலர் தனித்தனி வகையில் ஒவ்வொரு முறையில் அக்காலத்தைச் சார்ந்த வரலாற்றை ஆராய்ந்துள்ளனர். அவர்கள் குறிப்புக்களின் அடிப்படையை ஒட்டியே நாமும் அக்கால வரலாற்றைக் காணல் நலம் பயப்பதாகும்.

உலகில் உள்ள மக்களை அவர்தம் மொழி, பண்பாடு, நாகரிகம் இவற்றை ஒட்டியும், அவர்தம் உடற்கூறுகளின் அமைப்பை ஒட்டியும் சில வகுப்புக்களாகப் பிரித்துள்ளனர். மக்கள் முதலில் தோன்றி வளர்ந்த இடங்களென இரண்டைத்தான் பெரும்பாலும் வரலாற்றை உணர்ந்தவர் கூறுகின்றனர். ஒன்று, இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே இருந்த பரந்த நிலப்பரப்பாகும், மற்றொன்று, மத்திய தரைக் கடற்பகுதியாகும். இந்த இரண்டிடங்களிலோ, அன்றி இரண்டில் ஒன்றிலோ, மக்களினம் முதல் முதல் தோன்றிப் பிறகு மெள்ள மெள்ள உலகெங்கணும் பரவியிருக்க வேண்டுமென்பது அறிஞர் பலர் கண்ட முடிந்த முடிபாய் உள்ளது. இவ்விரண்டில் 'லெமூரியா' என்னும் குமரிக் கண்டம் இழந்த ஒன்றாகி விட்டது. எனவே, அதன் அடிப்படையை வைத்து ஆராய வழி ஏற்படவில்லை. எனவே, குமரி முனை தொடங்கி, மத்திய தரைக்கடல்