பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வரலாற்றுக்கு முன்


அவர்களைப் போரில் வென்று வென்று மெள்ள மெள்ளத் தெற்கே துரத்தினர் என்பதும், என்றாலும் இன்றளவும் அவர்கள் வாழ்ந்ததை விளங்கவைக்கும் பல சான்றுகளை அத்திராவிடர்கள் அவ்வடவிந்தியாவில் விட்டே வந்துள்ளார்கள் என்பதும், பின்னர் ஆரியர்கள் தங்கள் ஆணை வகையில் இந்தியநாட்டுப் பரப்பைப் பல வகையில் ஆளத் தொடங்கினார்கள் என்பதும் ஆகும். இன்று இந்திய வரலாற்றை ஆராயும் அறிஞர்கள் இந்த உண்மையை ஒத்துக் கொள்ளத்தக்க சான்றுகள் பலப்பல பல துறைகளிலும் உள்ளன. இப்படி உண்மையைக் கூறுவதால் ஒரு சாராருக்கு உயர்வோ மற்றொரு சாராருக்குத் தாழ்வோ உண்டாயிற்று என்று கூற முடியாது. அவரவர் கால எல்லையில் நின்று அவரவர் இனமும் பண்பாடும் வளருவதை உண்மையில் விளக்கிக் காட்டுவதுதான் வரலாறே அன்றி, அந்த அடிப்படை உண்மைகளை மாற்றித் தத்தம் விருப்பம் போல ஒருவரை உயர்த்துவதோ அன்றித் தாழ்த்துவதோ வரலாறு என்று எவ்வாறு கொள்ள முடியும்? இந்த அடிப்படையில் நின்றே அக்காலத்து வடக்கும் தெற்கும் ஒன்றிய வகையை சில கட்டுரைகளில் பின்னால் விளக்கியுள்ளேன். இனி ஆரியர் வடநாட்டில் மட்டுமன்றித் தென்னாட்டிலும் பரவி, அங்கு வாழ்ந்த மக்களோடு நெருங்கிக் கலந்த பிறகு எப்ப்டி அவர்தம் கலப்பும் கொள்கையும் விரவின என்பதையும் காணலாம்.

சந்திரகுப்தப் பேரரசுக்கு முன்னே சிறந்த பேரரசுகள் வடவிந்தியாவில் இருந்தன எனினும், அவை பற்றிய திட்டவட்டமான குறிப்புக்கள் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, அக்கால எல்லையில் நாமும் நின்று அக்காலத்தில் வடக்கும் தெற்கும் இணைந்ததைக் காட்டும் இரண்டொரு சான்றுகளையும் காணலாம். இதற்கும் நாம் முன் கண்ட ஆரியர் கங்கைக் கரைக்கு வந்த காலத்துக்கும் இடையில் ஓர் ஆயிரமாண்டுகள் கழிந்துவிட்டன. அந்த ஆயிரமாண்டுகளில் நாட்டில் என்னென்ன நடைபெற்றன என்பதைத் திட்ட