பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வரலாற்றுக்கு முன்


கல்வெட்டுக்களே காட்டுகின்றன. இவர்கள் நமக்கு நன்கு பழக்கமானவர்களே எனினும், அசோகர் கல்வெட்டுக்கள் மூலம் இவர்களைப் பற்றிப் பல புதிய உண்மைகளை உணர்ந்துகொள்ள முடிகின்றது. அசோகர் கல்வெட்டுக்கள் சோழ பாண்டியரைப் பன்மையிலேயே குறிக்கின்றன. எனவே, இரு வேறு சோழர்களும் அப்படியே இருவேறு பாண்டியர்களும் அவர் காலத்தில் வாழ்ந்தார்கள் எனக் கொள்ளலாம். அவர் கல்வெட்டுக்களுக்கு ஏற்ற நிலையில் அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த, வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதிய யவன யாத்திரிகர் தாலமி[1] பெரிபுளுஸ்[2] போன்றார் எழுத்துக்களும் அமைந்துள்ளன. சோழர் ஆட்சி தெற்கும் வடக்கும் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது, தெற்குச் சோழர்கள் திருச்சிக்கு அடுத்த உறையூரைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பது அறிய முடிகின்றது. சோழர் தலை நகராக ஒர்துரா (Orthura) என யவன ஆசிரியர் குறிப்பது உறையூரையேயாகும் எனக் கன்னிங்காம் அவர்கள் கருதுவது பொருத்தமானதாகும். இக்கருத்தை வலியுறுத்தி இந்தியப் பழமை பற்றி வெளி வந்த இதழ்த் தொகுதி[3] திட்டமாகவும் எழுதியுள்ளது. எனவே, தெற்கில் ஆண்ட சோழர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர் என்பது நன்கு தெளிவாகின்றது. இதனால், நாம் மற்றொன்றும் எண்ண வேண்டியுள்ளது. காவிரிப் பூம்பட்டினம் என்னும் புகார் அழிந்த பிறகுதான் உறையூர் தலைநகராய் வளர்ந்ததென்று கூறும் ஒரு சிலர்தம் கூற்றுக்கள் பொருந்தா என்பதும், புகார் அழியு முன்பே உறையூரும் சோழர் தலைநகராகவே இருந்தது என்பதும் உறையூர் உள் நாட்டுத் தலைநகராகவும் இருந்தது என்பதும்


  1. Ptolemy
  2. Periplus
  3. Indian Antiquity