பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வர்ணாஸ்ரமம்


களியாட்டத்திலே ஈடுபட்டு உலவுமே என்பதை எண்ணினான்,நாணமுடைய நங்கை, நெஞ்சிலேயுளதை வீட்டார் அறியக்கூடாதே என்றெண்ணி அஞ்சிப், பிரிந்துபோன தலைவன், வருவார்! இன்று வருவார்!! என்ற இன்சொலை எவரேனும் பேசிடக் கேட்டால் புண்ணாறும் என்று கருதிப், பேசிட ஓர் பைங்கிளியை எடுத்துத் தன் அங்கையில் ஏந்தி, பல பேசிச் சலசலப்புண்டாக்கி மனையுளோருக்குத் தன்னைக் கிளி காட்டிக் கொடுத்துவிடுமோ என்று அஞ்சி, 'கிளியே! அவர் இன்று வருவார் என்ற சொல்மட்டுமே உரைத்திடு, என்று கேட்பாள், எனத் தலைவன் எண்ணி, வேகமாகத் தேரைச் செலுத்து, என்று தேர்ப்பாகனுக்குக் கூறுகிறான். அவனை ஊக்குவிக்கக் கருதிப்போலும், 'நற்றிறம்படைத்த பாகனே' என்றும் அவனைப் புகழ்கிறான். காதற் பாதையைக் கவி இளநாகனார் கன்னித் தமிழிலே, கவிதையாக்கிக் கூறியுள்ளார், அகநானூறு எனும் அருந்தமிழ் நூலிலே!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, பட்டமளிப்பு விழாவிலே, அண்ணல் சர் சண்முகம் ஆற்றிய அழகிய, அரிய, சொற்பொழிவினைப் படித்ததும் எனக்கு இந்தச் செந்தமிழ்ச் செய்யுள் நினைவிலே நர்த்தனமாடிற்று.

"பரதா! சர் சண்முகத்தின் வீரவுரை படித்த உனக்கு விரகதாபச்செய்யுள் நினைவிற்கு வருவானேன்! தமிழ்க்கலையின் உயர்வுபற்றி, சேரநாட்டாட்சியினைச் சில ஆண்டுகள் நடாத்திய சண்முகம் செப்பினாரே, இதுபற்றி, ஏடு விரித்து எடுத்தாயோ இன்சுவையை" என்று கேட்பீர்கள். இல்லை தோழர்களே! கன்னித்