பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 வல்லிக்கண்ணன் கதைகள்

மாதவிக் குட்டி வெறுமனே பார்த்தாலும் போதும். எதிரே நிற்பவன் குற்றாலத்தின் குளுகுளு சாரலில் சுக உலா கிளம்பியவன் போல் ஆகி விடுவான். ஆனால், அவள் சும்மா பார்க்க மாட்டாளே! மை பூசப்பட்டிருக்கிறதோ இல்லையோ எனும் ஐயத்தைத் துண்டும்படி ஒரு கருமை வரையிட்ட 'மாவடு வகிர் அன்ன' நெடுங்கண்கள் சுடரிட, இதழ்களில் சிறு நகை தவழ, அவள் 'என்ன விஷயம்?' என்ன விஷயம்?' என்று ஆர்வத்தோடு கேட்பவள் போல் பார்வை எறிவாள். அப்போது குற்றாலம் அருவியில் குளிக்கிற அற்புத இனிமை அல்லவா பிறக்கும்!

மாதவி சகஜமாகச் சிரித்துப் பேசும் சுபாவம் உடையவள். புதிதாக அறிமுகப்படுத்தப் பெறுகிற போது கூட, 'ரொம்ப நாள் பார்த்துப் பழகியவர்கள் போல்' முகம் நிறைந்த சிரிப்பு வழங்குவாள். வெகு விரைவிலேயே தாராளமாகப் பேச்சுக் கொடுத்து, பேச்சு வாங்க ஆரம்பித்து விடுவாள். அவள் முன்னால் நின்று உரையாடுவதே இனிய அனுபவமாக, சுசிருசியான குளிர் பானத்தைச் சுவைத்துப் பருகுவது போன்ற இன்பமாக அமையும். -

அந்த இன்பத்தை இழக்க மனம் இல்லாதவர்கள் தான் அவ் அலுவலகத்தில் மிகுதியாக இருந்தனர். பொதுவாகவே அங்குள்ளவர்களுக்கு அதிகமான வேலை கிடையாது! பத்தரை மணி முதல் மாலை ஐந்து மணிவரை ஆபீஸ் நேரம்; நடுவில் ஒரு மணி நேரம் இடைவேளை என்ற திட்டம் இருந்தது என்னவோ உண்மை தான், ஆனால் ஒவ்வொருவரும் இடைக்கிடையே 'ஓய்வு நேரம்' தேடிக் கொள்ளத் தயங்கவே இல்லை. சிற்றுண்டி விடுதியில் சிறிது நேரத்தைப் போக்குவார்கள். பெட்டிக்கடை அருகில் நின்று சிகரெட் பிடிப்பார்கள். நண்பரைக் கண்டு பேசச் செல்வது போல் ஒவ்வோர் அறையினுள்ளும் புகுந்து அங்குள்ள பெண்கள் முன்னே தங்கள் உடல் அழகையும், ஆடைப் பகட்டையும், அறிவுப் பிரகாசத்தையும் வெளிச்ச மிடுவதில் உற்சாகம் காட்டுவார்கள்.

பரமசிவத்திடம் சந்தேகத் தெளிவு பெற வருகிறவர்கள் போல் எட்டிப் பார்க்கிறவர்களும், 'உங்களைப் பார்த்துப் போகலாமென்று வந்தேன்’ என்று கூறிக் கொண்டே வருகிறவர்களும், உண்மையில் மாதவி எனும் சுடரினால் கவரப்படுகிற மனித விட்டில்கள் தாம் என்பதைப் பரமசிவமே நன்கு அறிவார். மாதவிக்கும் ஆண்களின் போக்கைப்புரிந்து கொள்ளத் தெரியாதா என்ன?