பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV

கதைப் பின்னல்

சு. சமுத்திரத்தின் ‘வளர்ப்பு மகளில்’ இத்தகைய கலைத் திறனைக் காண்கிறோம். மனித மனத்தின் தன்மைகளைத் தெளிவாகக் காட்டும் வண்ணம் கதைப்பின்னல் அமைந்துள்ளது முந்தைய நாவல்களில் பெற்ற அனுபவத்தை இதில் காண்கிறோம்

ஒரு பெண் தனது தாய்ப் பாசத்திற்கும் கடமையுணர்வுக்கும் இடையே தடுமாறுகிறாள். இரண்டுக்கும் நடுவில் ஒருவழியைப் பின்பற்றி வாழ்க்கையில் நிறைவு பெறுகிறாள். படிப்பவர்களுக்கும் மனநிறைவை ஏற்படுத்தி விடுகின்றார் ஆசிரியர். கதைப் பின்னலின் ஒரு முக்கிய பகுதியான இதனை, ஆசிரியர் மிகத் திறமையோடு படைத்திருக்கிறார்.

‘வளர்ப்பு மகளில்’ கதைப்பின்னல் எளிமையானதாக - இயற்கையானதாக அமைந்துள்ளது. கருத்துவேறுபாட்டால் மல்லிகா தன் வளர்ப்புத் தந்தையை விட்டுப் பிரிவதும், பின்னர் சூழ்ச்சி செய்தவர்கள் சூரியனைக் கண்டு நீங்கும். காரிருள் போல் நீங்க, மல்லிகா மீண்டும் தன் வளர்ப்புத் தந்தையோடு சேர்ந்து கொள்கிறாள்.

இவ்விதமாகத்தான் கதையின் முடிவு அமைய வேண்டி உள்ளது. வேறு முறையில் அமைவதற்கு வழியில்லை என்று படிப்பவர்கள் நினைக்கும்படி கதையின் முடிவு அமையவேண்டும். கதை மாந்தர்களின் செயல்கள் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையில் இயற்கைக்கு விரோதமாக இராமல், இயல்பானதாக மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. கருது பொருளை மையமாக வைத்து சுவையாக கதைப்பின்னலை அமைத்துள்ளார்.

பாத்திரப் படைப்பு

கதை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப் பெறும் நாவல்கள் பல, வாழும் இயல்பை இழந்து விடுகின்றன. நாவலைப் படிப்பவர்கள் சில காலத்திற்குப் பிறகு மறந்து விடுவர். பாத்திரப் படைப்பிற்கு முதலிடம் தந்து எழுதப்பெறும் நாவல்கள் உயர்ந்த இலக்கியமாகப் போற்றப்படுகின்றன. அந்த நாவல்களில் வரும் கதைமாந்தர்கள் நம் நெஞ்சை விட்டு நீங்கா இயல்பினராக மாறிவிடுகின்றனர். கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் சிவகாமியையோ, பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி வந்தியத் தேவனையோ நாம் மறக்க முடிவதில்லை. இதற்குக் காரணம் அந்த நாவலைப் படைத்த ஆசிரியரின் படைப்பாண்மைத் திறமையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/6&oldid=1133647" இலிருந்து மீள்விக்கப்பட்டது