16
ஓரிரு நாட்கள் ஓடின.
"இந்தாங்கப்பா" என்று சொல்லி, இரவில் மாத்திரையை நீட்டும் மகளில்லை. "இதை மருந்துன்னு நினைக்காமல், நாம் சாப்பிடுகிற ஆகாரத்தில் ஒன்றுன்னு நினையுங்கப்பா" என்று. தாயாக, மகளாக, பாட்டியாக, பரம்பொருளாகச் சுற்றிவந்து சொல்லும் மகளைப் பார்க்கத் துடித்தார். எப்படிப் போவது? பெருமாள் ஏதாவது பேசினால்... மகளின் செல்லக் கையில், செல்லமாகக் கொண்டுவரும் பாலை, ஆனந்தமாகக் குடித்த வாய், தானாக உளறியது. மாத்திரை கொடுத்த மல்லியை நினைத்த அவர் வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையைக் கூட மறந்தார். விளைவு...
சொக்கலிங்கம் படுக்கையில் விழுந்தார். ஆஸ்பத்திரியில் சேரும் அளவிற்கு, சீரியஸ் இல்லை. அதேசமயம் அரவை மில்லுக்குப் போகும் அளவிற்கு லேசாகவும் இல்லை. எப்படியோ தேறிக் கொண்டிருந்தார்.
நண்பகலில் தூங்கிவிட்டு கண்விழித்த சொக்கலிங்கம், மனைவி, வியர்த்துக்கொட்ட வெளியில் இருந்து வருவதைப் பார்த்துவிட்டு, "அண்ணன் வீட்டுக்குப் போனியா?" என்று கேட்டபோது, பார்வதி அழுதுவிட்டாள்.
"அவளைப் பார்க்காமல் இருக்க முடியல. அவள் முகத்தையாவது பார்த்துட்டு வரலாமுன்னு அந்தத் தெரு வழியா நடந்தேன். வீட்டுக்குள்ள இருந்து வெளியில் வந்தவள் என்னைப் பார்த்துட்டு. முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிட்டாள். சொல்லுங்க. நான் அந்த அளவுக்கு பாவியா..?"
சொக்கலிங்கம் எதுவும் சொல்லவில்லை. கண்களை மூடிக்கொண்டார். அப்படியும் நினைவுகளை மூட முடியாததால், மீண்டும் கண்களைத் திறந்து சூனியமாகப் பார்த்தார். மல்லிகாவைப் பார்ப்பதற்காக, 'தற்செயலாகப்' போவதுபோல் போன பார்வதியின் கண்களில், மல்லிகா தட்டுப்பட்டதுபோல் மல்லிகாவின் கண்களில் பார்வதி அகப்படவில்லை. இது பார்வதிக்குத் தெரியாது
பார்வதி பொருமிக்கொண்டிருக்க சொக்கலிங்கம் சூடான