பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்திற்குள் சென்று பார்த்தால் தெரியும். எனவே, தென்புலத்தார் என்பதற்கு, சிறந்த செயல்கள் செய்து சென்றுபட்ட முன்னோர் எனப் பொருள் கூறலே சாலப் பொருந்தும். 4. பழியஞ்சிப் பாத்துண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். (பதவுரை) வாழ்க்கை- (ஒருவனுடைய இல்வாழ்க்கையானது, பழி அஞ்சி - (பொருள் தேடுதல் முதலியவற்றில் உண்டாகும்) பழிக்கு அச்சப்பட்டு, பாத்து - (அப்படி நல்லவழியில் வந்த செல்வப்பயனைப் பலர்க்கும்) பகுத்துக் கொடுத்து, ஊண் - (தானும்) உண்ணுதலை, உடைத்தாயின் - உடையதாக இருக்குமேயானால், வழி - (அந்நல்வாழ்க்கையின்) தொடர்ச்சி, எஞ்சல் -அற்றுப்போதல், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், இல்-இல்லை. இனிமுறையே மணக்குடவர் உரையும், பரிமேலழகர் உரையும் வருமாறு : (மண-உரை) இல்வாழ்க்கையாகிய நிலை பழியையும் அஞ்சிப் பகுத்துண்டலையும் உடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத்தினும் இல்லை. (பரி-உரை) பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின், அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தல் இல்லை. (தெளிவுரை) கெட்ட வழியில் பணம் தேடினால் உலகம் பழிக்கும் என்று அஞ்சி, நல்ல வழியில் தேடி, அதனைப் பலர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்பவனுடைய வாழ்க்கை தொடர்ந்து நல்ல விதமாக நடக்கும் என்பது வள்ளுவரின் வாய்மொழி. இஃது என்னே விந்தை உலக நடை ஒன்றும் திருவள்ளுவர்க்குத் தெரியாது போலும்! என்று வியக்கலாம் சிலர். ஏன்? வள்ளுவர் கண்ட மனையறம் 15