66 வழிகாட்டி
மருதம் பூவை அப்பினாற்போலக் கனமாகச் சந்தனக் குழம்பை அப்பியிருக்கிறார்கள். நன்றாக முற்றி வயிரம் பெற்ற சந்தனக் கட்டையை அரைத்துச் சேர்த்த நறுமணக் குழம்பு அது. ஈரம் இருக்கும்போதே அதன்மேலே வேங்கைப் பூவின் தாதை அப்பியிருக்கிறார்கள். பின்னும் விளா மரத்தின் சிறிய தளிரைக் கிள்ளி ஒருவர் மேலே ஒருவர் வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
......... திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி, விரிமலர் வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா. (திண்ணிய வயிரமும் வாசனையும் உடைய கட்டையை அரைத்த, பொலிவும் நிறமும் பெற்ற சந்தனக் குழம்பைத் தேன் கமழும் மருதம்பூவை ஒப்பக் கோங் கரும்பு போன்ற இளைய நகிலிலே பூசி, விரிந்த வேங்கை மலரின் நுண்ணிய தாதை மேலே அப்பி, கண்டு மகிழ்வதற்கு ஏற்ப விளாவினது குறிய தளிரைக் கிள்ளித்தெறித்து - மகளிர் ஆடுவர்.
நறுங்குறடு - சந்தனக்கட்டை உரிஞ்சிய - தேய்த்த, கேழ் - நிறம். தேய்வை - அரைத்த சந்தனம். வெள்ளில் - விளா, முறி - தளிர்)
இத்தனை அலங்காரத்துக்கும் உரிய பொருளைத் தருவதாகவும் ஏற்ற நிலைக்களனாகவும் இருக்கிறது அந்த அழகிய பூஞ்சோலை.
தம்மைப் புனைந்து கொள்வதில் மகளிருக்கு ஆவல் அதிகம். மானிட மகளிரானாலும் தெய்வ மடந்தை